10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நாளையுடன் முடிவு; விடைத்தாள் திருத்தும் பணி 25 ஆம் தேதி முதல் தொடக்கம்

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நாளையுடன் முடிவு; விடைத்தாள் திருத்தும் பணி 25 ஆம் தேதி முதல் தொடக்கம்
10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நாளையுடன் முடிவு; விடைத்தாள் திருத்தும் பணி 25 ஆம் தேதி முதல் தொடக்கம்

நாளை (வியாழக்கிழமை) சமூக அறிவியல் தேர்வு நடக்க இருக்கிறது. இதோடு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நிறைவு பெறுகிறது.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை ஏப்ரல் 20ந்தேதியுடன் (வியாழக்கிழமை) நிறைவடைகிறது. பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி வரும் 25 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) தொடங்கும் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. 

பதினொன்று மற்றும் பனிரெண்டாம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கான பொதுத்தேர்வு முடிவு பெற்ற நிலையில், அவர்களுக்கான விடைத்தாள் திருத்தும் பணிகள் தொய்வின்றி  நடந்து வருகின்றன. இதையடுத்து பத்தாம் வகுப்பு பயிலும் மாணவ மாணவிகளுக்கான பொதுத்தேர்வு கடந்த  6 ஆம் தேதி தொடங்கியது. இந்த பொதுத்தேர்வை 9 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் எழுதுகிறார்கள்.

இதுவரை தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல் ஆகிய பாடங்களுக்கான தேர்வுகள் முடிந்துள்ள நிலையில், நாளை (வியாழக்கிழமை) சமூக அறிவியல் தேர்வு நடக்க இருக்கிறது. இதோடு  பத்தாம் வகுப்பு (எஸ்.எஸ்.எல்.சி. ) பொதுத்தேர்வு நிறைவு பெறுகிறது. 

இதனைத்தொடர்ந்து விடைத்தாள் திருத்தும் பணி வரும் 25ம் தேதி முதல் அடுத்த மாதம் மே 3ம் தேதி வரை விடுமுறை நாட்கள் தவிர்த்து வேலைநாட்களில் நடைபெற உள்ளது. விடைத்தாள்களைத் திருத்தப்பட்டு மதிப்பெண்கள் வருகிற 25ம் தேதி முதல் அடுத்த மாதம் மே 4ம் தேதி வரை ஆன்லைன் வாயிலாக பதிவேற்றம் செய்யப்படும் வகையில் அதற்கான ஏற்பாடுகள் பள்ளிக் கல்வித் துறையால் செய்யப்பட்டுள்ளன. 

இந்நிலையில் அரசு, தேர்வுத்துறை சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அதில் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடுவதற்கு ஏற்றவாறு மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளன.  

அதில் மதிப்பீட்டு பணியை செய்து முடிக்க தேவையான ஆசிரியர்களின் எண்ணிக்கையை சரியாக கணக்கிட்டு பாடவாரியான, பயிற்று மொழி வாரியான ஆசிரியர்களை உடனடியாக பணி விடுவிப்பு செய்து முகாம் பணிக்கு அனுப்பி வைக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் தமிழ் வழியில் கற்பிக்கும் ஆசிரியர்கள் தமிழ்வழி விடைத்தாள்களையும், ஆங்கில வழியில் கற்பிக்கும் ஆசிரியர்கள் ஆங்கில வழி விடைத்தாள்களையும் மட்டுமே திருத்தி மதிப்பீடு செய்ய வேண்டும். அதற்கேற்றவகையில் தமிழ், ஆங்கில வழிகளில் கற்பிக்கும் ஆசிரியர்களை கணக்கிட்டு நியமனம் செய்திட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது

அதோடு தேர்வு முடிவு மதிப்பீட்டு பணியினை மேற்கொள்ள தங்களுடைய ஆளுகைக்குட்பட்ட அரசு பள்ளிகள், அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் அனைத்திலிருந்தும் பத்தாம் வகுப்பு பாடங்களை கற்பிக்கும் தகுதிவாய்ந்த பாட ஆசிரியர்களை தவறாமல் பணியில் இருந்து விடுவித்து தேர்வாளர்களாக நியமனம் செய்ய வேண்டும். 

எந்தவொரு பள்ளியில் இருந்தும் ஆசிரியர்கள் விடுபடாது கண்காணிக்க வேண்டும். தனியார் பள்ளிகள் தங்களுடைய ஆசிரியர்களை முகாம் பணிக்கு முழு எண்ணிக்கையில் அனுப்பி வைத்தால் மட்டுமே அப்பள்ளிக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் எனவும் அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com