போலீஸார் தொடர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் 7 போலி மருத்துவர்களைக் கைது செய்து போலீஸார் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் மருத்துவம் படிக்காமல் போலியாக சிகிச்சை அளித்து வருவதாகத் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணனுக்குக் ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில் போலி மருத்துவர்களை பிடிக்க அனைத்து காவல் நிலைய போலீசாருக்கும் உத்தரவிட்டார். அதன் காரணமாகக் காவல்துறையினர் மற்றும் மருத்துவர்கள் அடங்கிய தனிப்படையினர் இணைந்து மாவட்டம் முழுவதும் தீவிர தேடுதல் வேட்டையைத் தொடங்கினர்.
இதில் கந்திலி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வேலு, ஜோலார்பேட்டை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் மனோரஞ்சிதம், குருசிலாப்பட்டுக் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் பழனி, நாட்றம்பள்ளி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் அருண், ஆலங்காயம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தனபால், உமராபாத் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் இம்மானுவேல் மற்றும் ஜெயபால் ஆகிய 7 போலி மருத்துவர்களை அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும் சிகிச்சை அளிக்க வைத்திருந்த மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்து மாத்திரைகளையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுசம்பந்தமாகப் போலீஸார் தொடர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.