மகளுக்குத் தவறான சிகிச்சை; போராடிய காவலர் - விசாரணைக் குழு அமைத்த அமைச்சர் மா.சுப்ரமணியன்
ஆவடி காவலர் குடியிருப்பைச் சேர்ந்தவர் கோதண்டராமன். இவர் சென்னை, ஓட்டேரி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வருகிறார். இவரது மகள் பிரதிஷா (10). சிறுமிக்கு 3 வயது இருக்கும்போது சிறுநீரகப் பாதிப்பு ஏற்பட்டதால், எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இவரது மகளுக்கு மருத்துவர்கள் பரிந்துரையின்படி மருந்து, மாத்திரைகளை 5 ஆண்டுகளாக பெற்றோர் கொடுத்து வந்துள்ளனர். ஆனால், 2021-ம் ஆண்டு சிறுமிக்கு ரத்தம் உறைதல் ஏற்பட்டு, வலது காலும், இடது கையும் செயலிழந்துள்ளன. இதற்கு, மருத்துவமனை நிர்வாகம் சரியான விளக்கம் அளிக்கவில்லை. காவல்துறை மற்றும் சுகாதாரத் துறையில் பெற்றோர் புகார் அளித்திருந்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால், வேதனை அடைந்த கோதண்டராமன் நேற்று முன்தினம் தலைமை செயலகம் அருகே மகள் பிரதிஷாவுடன் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது ‘எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையின் தவறான சிகிச்சையால்தான், என் மகளின் வாழ்க்கை இப்படியாகிவிட்டது’ எனக் கூறி இருந்தார். மேலும் அவர், ’சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனக் கண்ணீர்மல்க தெரிவித்தார்.
இதுதொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில், ``அரசு மருத்துவமனைகளில் சில தவறுகள் நடக்கும். அந்த தவறுகளுக்கு உடனடியாக தீர்வு காணப்படுகிறது. காவலர் கோதண்டராமனிடம் செல்போனில் பேசினேன். அவர் குழந்தைக்கு 3 வயதிலிருந்தே சிகிச்சை பெற்று வருவதாக கூறினார்.
பாதிக்கப்பட்டவரின் தந்தை ஒரு மருத்துவரை குற்றம்சாட்டினார். இதுகுறித்து விசாரணை நடத்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது. குழுவினர் விசாரணை நடத்தி தவறு நடந்திருப்பதாக உறுதிப்படுத்தினால் சம்பந்தப்பட்ட மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்'' எனஅமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.