பஞ்சாப் மாநிலத்தில் வீர மரணம் அடைந்த கமலேஷ் உடலுக்கு அரசு மரியாதை வழங்க கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பஞ்சாப் மாநிலத்தில் வீர மரணம் அடைந்த கமலேஷ் உடலுக்கு அரசு மரியாதை வழங்க கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பஞ்சாப் மாநிலம் பதிண்டா ராணுவ முகாமில் கடந்த 13ம் தேதி காலை நடந்த துப்பாக்கிச் சூட்டில் 4 வீரர்கள் உயிரிழந்தனர். இதில் சேலம் மாவட்டம் மேட்டூர் வனவாசி அருகே உள்ள பனங்காட்டை சேர்ந்த கமலேஷ் மற்றும் தேனி மாவட்டத்தை சேர்ந்த யோகேஷ்குமார் ஆகிய 2 தமிழர்கள் வீரமரணம் அடைந்தனர்.
இந்நிலையில் உயிரிழந்த வீரர்களின் உடல் நேற்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டு சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்தவகையில் சேலம் மாவட்டத்தை சேர்ந்த கமலேஷ் உடல் விமானம் மூலம் கோயம்புத்தூருக்கு கொண்டு வரப்பட்டது.
அங்கு அவரது உடலுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டு ராணுவ வாகனத்தில் சொந்த ஊரான மேட்டூர் அருகே உள்ள வனவாசி கிராமத்திற்கு கொண்டு வரப்பட்டது. ராணுவ வீரரின் உடலுக்கு அரசு மரியாதை வழங்கப்படும் என நினைத்து, உறவினர்கள் ஏற்பாடு செய்து இருந்தனர்.
ஆனால் அரசு மரியாதை வழங்கப்படாது என அறிந்ததும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் கடும் அதிருப்தி அடைந்தனர். எனவே ராணுவ வீரர் கமலேஷ் உடலுக்கு அரசு மரியாதை வழங்க வேண்டும் என கூறி ஆம்புலன்ஸ் முன்பாக மேச்சேரி-வனவாசி பிரதான சாலையில் கிராம மக்கள் மற்றும் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் ராணுவ வாகனத்தில் மட்டுமே உடலை எடுத்து வர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
தகவலறிந்து விரைந்து வந்த காவல் துறையினரிடம் கிராம இளைஞர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் 4 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதை அறிந்து அங்கு 200க்கும் மேற்பட்ட இளைஞர்கள் அங்கு குவிந்தனர்.
இதன் பின்னர், கிராம மக்கள் கோரிக்கையை ஏற்று ஈரோட்டில் இருந்து ராணுவ வாகனத்தை கொண்டு வந்து மாலை 4.20 மணிக்கு வனவாசி பகுதியில் இருந்து பனகாட்டில் உள்ள வீட்டுக்கு உடலை ஊர்வலமாக எடுத்து சென்றனர். அங்கு பொதுமக்கள் திரண்டு வந்து மரியாதை செலுத்தினர். மேலும் ராணுவ அதிகாரிகள், என்.சி.சி அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கமலேஷ் உடலுக்கு மரியாதை செலுத்தினர்.
இதனையடுத்து கமலேஷ் உடலில் போடப்பட்ட தேசியக் கொடியை எடுத்து பெற்றோரிடம் அதிகாரிகள் வழங்கினர். பின்னர், அருகில் உள்ள மயானத்தில் கமலேஷ் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதில் மேட்டூர் தாசில்தார் முத்துராஜா, ஓமலூர் டி.எஸ்.பி சங்கீதா, மேட்டூர் டி.எஸ்.பி விஜயகுமார் ஆகியோர் உடன் இருந்தனர்.