போலீசார் தலைமைக்காவலரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்
அரசு மருத்துவமனையில் தனது பெண் குழந்தைக்கு தவறான சிகிச்சை மேற்கொண்டதால் உடல்நல பாதிப்பு ஏற்பட்டதாகக் கூறி தமிழ்நாடு சட்டமன்ற நுழைவு வாயில் முன்பு போலீஸ்காரர் மகளுடன் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை ஓட்டேரி காவல் நிலையத்தில் தலைமை காவலராகப் பணிபுரிபவர் கோதண்டபாணி. இவரது மகள் பிரதிக்ஷா ( வயது 10) சிறுநீரகப் பிரச்னை காரணமாக 3 வயது முதலே சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
அரசு மருத்துவமனை மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்ட மாத்திரைகளைக் கடந்த 5 ஆண்டுகளாக மேலாகச் சாப்பிட்டு வந்துள்ளார். இதன் விளைவாகச் சிறுமிக்கு கால் பாதத்தில் அரிப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து, மீண்டும் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காகச் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், அங்குச் சிறுமிக்கு இரத்த உறைவு ஏற்பட்டதாகத் மருத்துவர்கள் கணித்ததன் விளைவாகச் சிறுமியின் பாதம் கருகியதுடன் உடலில் ரத்தம் கெட்டுப்போனதாக கூறப்படுகிறது.
மேலும், தங்கள் அனுமதி இன்றிச் சிறுமிக்கு ரத்த சுத்திகரிப்பு செய்ததன் விளைவால் தனது மகளுக்கு வலிப்பு நோயும் ஏற்பட்டதாகத் தலைமை காவலர் கோதண்டபாணி தெரிவித்தார். மேலும் , தனது மகளுக்குத் தவறான சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், சிறுமிக்கு உரிய சிகிச்சை அளிக்க அரசு முன்வர வேண்டும் என வலியுறுத்தினார்.
மேலும், சட்டப்பேரவை எதிரே உள்ள சாலையில் அமர்ந்து தலைமை காவலர் திடீர் தர்ணாவில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், ‘எனது மகளுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து மருத்துவமனை இயக்குநருக்கும், மருத்துவமனை டீனுக்கும் புகார் அளித்துவிட்டேன். அதிகாரிகளுக்கும் புகார்கள் அனுப்பி விட்டேன் முறையாகப் பதில் இல்லை. 3 வயது முதல் 8 வயது வரை சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் தான் சிகிச்சை எடுத்தேன்’ என்று ஆதங்கப்பட்டார். இதைத்தொடர்ந்து போலீசார், தலைமைக்காவலரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.