பிளஸ் 2 தேர்வில் மாணவர்கள் காப்பியடிக்க உதவியதாக எழுந்த புகாரில் 5 ஆசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் 13ம் தேதி பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடங்கி கடந்த 3ம் தேதி முடிவடைந்தது. தமிழகத்தில் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பிளஸ் 2 தேர்வினை எழுதி உள்ளனர் என்றும், விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 10ம் தேதி தொடங்கப்படும் என தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.
இதற்கிடையே நீலகிரி மாவட்டம் மஞ்சூரை அடுத்த சாம்ராஜ் அரசு உதவி பெறும் பள்ளியில் கடந்த மாதம் 27ம் தேதி நடந்த பிளஸ் 2 கணித தேர்வில் ஒரு சில மாணவ மாணவிகளுக்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்த ஆசிரியர்கள் விடை எழுத உதவி செய்ததாக புகார் எழுந்தது.
இதுதொடர்பாக குறிப்பிட்ட தேர்வு மையத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்து கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் தேர்வில் விடை எழுத மாணவ மாணவிகளுக்கு ஆசிரியர்கள் உதவியது கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து தேர்வறையில் கண்காணிப்பாளர்களாக பணியாற்றிய ராம்கி, மூர்த்தி, முதன்மை கண்காணிப்பாளராக பணியாற்றிய ராதாகிருஷ்ணன், வழித்தட அலுவலராக பணியாற்றிய சீனிவாசன் மற்றும் செந்தில் ஆகிய 5 பேரை நீலகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனியசாமி பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.