பிரதமர் மோடி வருகை - சென்னையில் போக்குவரத்து மாற்றம்

பிரதமர் மோடி வருகை - சென்னையில் போக்குவரத்து மாற்றம்
பிரதமர் மோடி வருகை - சென்னையில் போக்குவரத்து மாற்றம்

பிரதமர் மோடி வருகையையொட்டி சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது

சென்னை விமான நிலையத்தின் புதிய ஒருங்கிணைந்த முனையத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைக்கிறார். மேலும் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் ரயில் சேவையையும் தொடங்கி வைக்கிறார். இதன் பின்னர், மெரினா காமராஜர் சாலையில் அமைந்துள்ள விவேகானந்தர் இல்லத்தில் ராமகிருஷ்ண மடத்தின் 125 வது ஆண்டு விழாவிலும் பங்கேற்கிறார்.

பிரதமர் மோடியின் சென்னை வருகையை ஒட்டி இன்று பல்வேறு போக்குவரத்து மாற்றங்களை சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து, பெருநகர காவல் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: 

விழா நடக்கும் இடங்களை சுற்றியுள்ள சாலைகளில், ஐஎன்எஸ் அடையார் முதல் சென்ட்ரல் ரயில் நிலையம் வரை, சென்ட்ரல் ரயில் நிலையம் முதல் விவேகானந்தர் இல்லம் வரையில் பிற்பகல் 3 மணி முதல் மாலை 6 மணி வரை போக்குவரத்து மெதுவாக செல்ல வாய்ப்புள்ளது என, பயணிகளுக்கு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

பிரதமர் மோடி விவேகானந்தர் இல்லம் வரும்போது காந்தி சிலை அருகே உள்ள கலங்கரை விளக்கத்தில் இருந்து வாகனங்கள் ஆர்.கே. சாலைக்கு திருப்பி விடப்படும். அங்கிருந்து நடேசன் சாலை சந்திப்பில் ஐஸ் அவுஸ், ரத்னா கபே, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, வாலாஜா சாலை சந்திப்பு வழியாக தொழிலாளர் சிலை அல்லது அண்ணாசாலைக்கு வலது புறம் வாகன ஓட்டிகள் திரும்பலாம்.

மேலும் போர் நினைவிடத்தில் இருந்து வெளியே வரும் வாகனங்கள் உழைப்பாளர் சிலையில் இருந்து வாலாஜா சாலையில் அண்ணாசாலை நோக்கி அல்லது திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, வாலாஜா சாலை சந்திப்பில் திருப்பி விடப்படும். இந்த மாற்று பாதை மாலை 4 முதல் மாலை 6 மணி வரை செயல்படுத்தப்பட உள்ளது. 

மேலும், வணிக வாகனங்களுக்கு மதியம் 2 மணி முதல் இரவு 8 மணி வரை வரை போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன் விபரம் பின்வருமாறு: 

அண்ணா ஆர்ச் முதல் முத்துசாமி முனை வரை இரு திசைகளிலும் வணிக வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படாது. ஈ.வெ.ரா நெடுஞ்சாலையில் வருகின்ற வாகனங்கள் அண்ணா ஆர்ச் வளைவில் திருப்பி அண்ணாநகர், புதிய ஆவடி சாலை வழியாக திருப்பிவிடப்படும். 

வெளியேறும் திசையில் செல்லும் வாகனங்கள் என்.ஆர்.டி புதிய பாலத்தில் இருந்து திருப்பி விடப்பட்டு ஸ்டான்லி சுற்று, மின்ட் சந்திப்பு, மூலக்கொத்தளம் சந்திப்பு, பேசின் பிரிட்ஜ் டாப், வியாசர்பாடி வழியாக திருப்பி விடப்பட உள்ளன.

ஹண்டர்ஸ் சாலையில் இருந்து வரும் வணிக வாகனங்கள் ஹண்டர் ரோடு, ஈ.வி.கே.சம்பத் சாலை வழியாக ஈ.வி.ஆர் சாலையை அடையும் விதமாக வாகனங்கள் திருப்பி விடப்பட்டு நாயர் பாயின்ட் நோக்கி திருப்பி விடப்படும். லேங்கஸ் கார்டன் சாலையில் இருந்து காந்தி இர்வின் மேம்பாலம் நோக்கி வரும் கனரக வாகனங்கள் ஈ.வெ.ரா சாலையை அடைய உடுப்பி பாயின்ட் நோக்கி திருப்பி விடப்பட உள்ளன. 

கிரீன்வேஸ் சாலையில் இருந்து வரும் கனரக வாகனங்கள் மந்தைவெளி நோக்கி திருப்பி விடப்படும். பாதுகாப்பை கருத்தில் கொண்டு உழைப்பாளர் சிலை முதல் விவேகானந்தர் இல்லம் வரையில் மெரினா சாலையில் வாகனங்கள் கூடுதல் ஆய்வு மற்றும் சோதனைக்கு உட்படுத்தப்படும். 

எனவே வாகன ஓட்டிகள் தங்களுடைய இலக்கை அடைய பயணத்தை திட்டமிடுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள். அதற்கேற்ப வாகன ஓட்டிகள் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்’ என சென்னை மாநகர போக்குவரத்து காவல் துறை அறிவித்துள்ளது. 

அதேப் போல், ‘பிரதமர் மோடியின் வருகையையொட்டி விமான நிலையத்தில் விமான சேவைகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. உள்நாட்டு மற்றும் பன்னாட்டு புறப்பாடு முனையங்களுக்கு செல்லும் வாகனங்களுக்கு மேம்பாலத்தில் செல்ல பகல் 2.50 மணியில் இருந்து 3.15 வரை சுமார் 25 நிமிடங்கள் தடை விதிக்கப்படும். 

அந்த நேரம் மேம்பால பாதையும் மூடப்படும். இந்த நேரத்தில் சென்னை விமான நிலையத்துக்கு செல்ல திட்டமிட்ட பயணிகள் முன்கூட்டியே செல்ல வேண்டும். பயணிகள் உள்நாட்டு மற்றும் பன்னாட்டு முனையங்களில் வருகை பகுதியில் இறங்கி, தரை வழியாக சென்று உள்நாட்டு மற்றும் பன்னாட்டு புறப்பாடு பகுதிக்கு ‘லிப்ட்’ வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம். 

அதேப்போல் ஜி.எஸ்.டி சாலையில் பிற்பகல் முதல் பல்லாவரத்தில் இருந்து சென்னை விமான நிலையம், கிண்டி மார்க்கமாக செல்லும் வாகனங்கள் செல்ல தடை  செய்யப்படும். ஜி.எஸ்.டி சாலையில் தாம்பரம், குரோம்பேட்டையில் இருந்து மீனம்பாக்கம், கிண்டி மார்க்கமாக செல்லும் வாகனங்கள் குரோம்பேட்டை மேம்பாலத்தில் இருந்து 200 அடி ரேடியல் சாலை வழியாக ஈச்சங்காடு சந்திப்பு, காமாட்சி மருத்துவமனை சந்திப்பு வழியாக வேளச்சேரி மார்க்கமாக அல்லது துரைப்பாக்கம் மார்க்கமாக சென்னைக்கு செல்லலாம். 

ஜி.எஸ்.டி சாலையில் பெருங்களத்தூரில் இருந்து தாம்பரம், பல்லாவரம் நோக்கி செல்லும் வாகனங்கள் தாம்பரம் மேம்பாலம் வழியாக வலதுபுறம் திரும்பி வேளச்சேரி பிரதான சாலை வழியாக சேலையூர், சந்தோஷபுரம், பள்ளிக்கரணை வழியாக சென்னைக்கு செல்லலாம். 

ஜி.எஸ்.டி சாலையில் செங்கல்பட்டில் இருந்து தாம்பரம் நோக்கி வரும் அனைத்து கனரக வாகனங்களும் வண்டலூர் வெளிவட்ட சாலை வழியாக சென்னைக்கு செல்லலாம். கிஷ்கிந்தா சாலையில் இருந்து தாம்பரம் நோக்கி வரும் கனரக வாகனங்கள் வெளிவட்ட சாலை ஓ.ஆர்.ஆர் வழியாக பூந்தமல்லி நோக்கி செல்லலாம். வாகன ஓட்டிகள் அனைவரும் இந்த போக்குவத்து மாற்றத்துக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com