விவசாய நிலத்தில் காட்டு பன்றிகளுக்கு வைத்த மின் வேலியில் சிக்கி மனைவி உயிரிழந்த மன வேதனையில் கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு அருகே பொம்மராஜி பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி மேகநாதன். இவருக்குச் சொந்தமான நிலத்தில் பயிர்களை காட்டு பன்றிகள் நாசப்படுத்தி வந்துள்ளது. இதனைத் தடுக்க மின்வேலி அமைத்துள்ளார். இந்நிலையில், வயலுக்கு தண்ணீர் பாய்ச்சச் சென்ற அவரது மனைவி துளசி, துரதிர்ஷ்டவசமாக மின்வேலியில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
மனைவி இறந்து கிடந்ததைப் பார்த்த கணவன் மேகநாதன் மன வேதனையடைந்துள்ளார். பின்னர் வீட்டிற்கு சென்ற அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்தச் சம்பவம் குறித்து பொதட்டூர்பேட்டை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மனைவி இறந்த வேதனையைத் தாங்கிக்கொள்ள முடியாத நிலையில், கணவரும் தற்கொலை கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.