தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு நிதி திரட்டவும், போதைப்பொருள், ஆயுத கடத்தல் நடைபெறுவதாக ரகசிய தகவல்
சென்னையில் எட்டு இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தியதில், 82 லட்ச ரூபாய் ரொக்கப் பணம், சிங்கப்பூர் டாலர், 300 கிராம் தங்கம் மற்றும் 10 கிலோ கஞ்சா உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு நிதி திரட்டவும், போதைப்பொருள் மற்றும் ஆயுத கடத்தல்கள் நடைபெற்று வருவதாக என்.ஐ.ஏ. அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இந்த நிலையில், கேரள மாநிலத்தில் உள்ள கடற்பகுதியில், கடந்த 2021ம் ஆண்டு, 300 கிலோ ஹெராயின் மற்றும் ஏ.கே. 47 ரக துப்பாக்கிகளை அம்மாநில கடலோர காவல் படையினர் கைப்பற்றினர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த தேசிய புலனாய்வு அமைப்பினர், இதன் தொடர்ச்சியாக, சென்னை, திருவள்ளூர், கேரளா உள்ளிட்ட இடங்களில் திடீர் சோதனை நடத்தினர்.
இந்த நிலையில், சென்னை போரூர் ஐயப்பன், குன்றத்தூரைச் சேர்ந்த ஃப்ளாரன்ஸ், கோவூர் சுரேஷ் குமார், பம்மல் பகுதியை சேர்ந்த ஏசுதாஸ் உள்ளிட்டோரின் வீடுகளிலும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். மேலும், சென்னை மண்ணடி பகுதியில் இயங்கி வரும் தனியார் விடுதிகளிலும், சென்னை பாரிமுனை ஈவினிங் பஜாரிலும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
இந்தச் சோதனையின்போது, 82 லட்ச ரூபாய் ரொக்க பணம், 300 கிராம் தங்க நகைகள், ஆயிரம் சிங்கபூர் டாலர்கள் மற்றும் 10 கிலோ கஞ்சா உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.