நாட்டின் வளர்ச்சிக்கு எதிராக வெளிநாட்டுநிதி பயன்படுத்தப்பட்டுள்ளது
'தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலை நாட்டின் 40 சதவீதம் காப்பர் தேவையை நிறைவேற்றி வந்த நிலையில், வெளிநாட்டு நிதிமூலம் மக்களைத் தூண்டிவிட்டுப் போராட்டம் நடத்தி ஆலையை மூடவைத்துவிட்டனர்' என்று தமிழக ஆளுநர் ரவி தெரிவித்துள்ளார்.
சுற்றுச்சூழலுக்கு எதிராக உள்ளது என்று, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகக் கடந்த 2018ம் ஆண்டு அப்பகுதி மக்கள் கிளர்ந்து எழுந்து போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தின்போது, காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 13 பேர் உயிரிழந்தனர். இதனால், 2018ம் ஆண்டு மே 28ம் தேதி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது.
இந்த நிலையில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கவேண்டும் என்று வேதாந்தா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் ஆலை மூடலுக்கான அரசின் உத்தரவு செல்லும் என்றும், வேதாந்தாவின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இதனைத்தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் மேல்முறையீடு செய்தது. கொரோனா நேரத்தின்போது, ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் ஆக்சிஜன் உற்பத்தி செய்து, பொது மக்களுக்கு இலவசமாக வழங்க ஸ்டெர்லைட் நிறுவனம் முன்வந்தது. இதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது. அதன்படி, 3 மாதம் உற்பத்திக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில் மீண்டும் ஆலை மூடப்பட்டது.
இதைத்தொடர்ந்து, பராமரிப்பு பணிக்காக ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க அனுமதி கோரி உச்சநீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் கோரிக்கை விடுத்தது. ஆனால் அந்தக் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கு விசாரணையை ஏப்.10க்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது. பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள ஆலையைத் திறக்க அனுமதிகோரி வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதனிடையே, தூத்துக்குடியில் வேதாந்தா நிறுவனத்தின் ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்பட்டுள்ளது. இந்த ஆலையை விற்க வேதாந்தா நிறுவனம் முடிவு செய்து, அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்த நிலையில், சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில், குடிமைப்பணி தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துரையாடல் நடத்தினார். அப்போது, பேசிய அவர், தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலை நாட்டின் 40 சதவீதம் காப்பர் தேவையை நிறைவேற்றி வந்தது. ஆனால், வெளிநாட்டு சக்திகள் துணையுடன், வெளி நாட்டு நிதி மூலம் மக்களைத் தூண்டிவிட்டு மூடிவிட்டனர்.
நாட்டின் வளர்ச்சிக்கு எதிராக வெளிநாட்டுநிதி பயன்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, வடகிழக்கு மாநிலங்களில் 250 கோடி ரூபாய் நாட்டிற்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனால், வெளிநாட்டில் இருந்து வரும் நிதியை மத்திய விட்டு முறைப்படுத்தியுள்ளது' என்றவர்,
'ஒரு மசாதோவை ஆளுநர் நிலுவையில் வைத்துள்ளார், நாகரீகமாக ஒப்புதல் தரவில்லை என்றுதான் பொருள் கொள்ளவேண்டும் என, உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தெரிவித்துள்ளது' என்றார்.