நெய்வேலி: நீட் பயிற்சி மாணவி தற்கொலை - என்ன நடந்தது?
நீட் தேர்வு எழுத தயாராகி வந்த நிலையில் மாணவி திடீரென ரயில் முன்பாக பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்.
கடலூர் மாவட்டம், நெய்வேலி 30வது வட்டம் பகுதியை சேர்ந்தவர் உத்திராபதி. என்.எல்.சி-யில் ஒப்பந்த தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவரது மகள் நிஷா (18). கடந்த ஆண்டு நெய்வேலியில் உள்ள பள்ளியில் பிளஸ் 2 படித்து முடித்தார். தேர்வில் நிஷா 399 மதிப்பெண்கள் எடுத்த நிலையில் அவருக்கு மருத்துவம் படிக்க ஆர்வம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் கடந்த ஆண்டு நீட் தேர்வு எழுதினார்.
ஆனால் போதிய மதிப்பெண்கள் கிடைக்காததால் மருத்துவப் படிப்பில் நிஷாவால் சேர முடியாமல் போய் உள்ளது. எனவே நீட் தேர்வு பயிற்சிக்காக நிஷா தயாராகும் வகையில் நெய்வேலி அருகே இந்திரா நகரில் அமைந்துள்ள தனியார் பயிற்சி மையத்தில் அவரது பெற்றோர் சேர்த்து பயிற்சி அளித்து வந்தனர். கடந்த ஓராண்டாக பயிற்சி மேற்கொண்ட நிஷா வருகிற மே மாதம் 7 ஆம் தேதி நீட் தேர்வு எழுதுவதற்காக தயாராகி வந்தார். இதற்காக அந்த பயிற்சி மையத்தில் தற்போது மாதிரி தேர்வுகள் வைக்கப்பட்டு வருகின்றன.
நீட் மாதிரி தேர்வு எழுதி வந்த நிலையில் அதிலும் சரியான மதிப்பெண்கள் பெறவில்லை என கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான நிஷா நீட் பயிற்சி வகுப்பு இல்லாத நிலையில் வகுப்புக்கு செல்வதாக கூறிவிட்டு நெய்வேலியில் இருந்து பேருந்து மூலம் வடலூருக்கு வந்துள்ளார்.
பின்னர், அருகே உள்ள தண்டவாளத்தில் பெங்களூருவில் இருந்து கடலூர் நோக்கி வந்த ரயில் முன்பாக பாய்ந்து நிஷா தற்கொலை செய்து கொண்டார். இதனை அடுத்து அங்கு இருந்தவர்கள் இந்த தகவலை காவல்துறையினருக்கு தெரிவித்துள்ளனர்.
தகவலறிந்து ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நிஷாவின் உடலை கைப்பற்றி உடல்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுதொடர்பாக ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நீட் தேர்வுக்கு தயாரான மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.