குடிநீர், கழிப்பறை உள்பட அடிப்படை வசதிகளை செய்து தர வலியுறுத்தி திடீரென உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை பல்கலைக்கழகத்தில் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட வசதிகள் பற்றாக்குறையாக உள்ளதாக கடந்த சில ஆண்டுகளாகவே மாணவ மாணவிகள் பல்கலைக்கழக நிர்வாகத்திடம் புகார் கூறி வந்தனர். ஆனாலும் அவர்களது கோரிக்கை மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த மாணவ மாணவிகள் சென்னை பல்கலைக்கழக நிர்வாகத்தின் அலட்சியப் போக்கை கண்டித்தும், அங்கு உடனே குடிநீர், கழிப்பறை உள்பட அடிப்படை வசதிகளை செய்து தர வலியுறுத்தியும் திடீரென உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது மாணவர்கள் ‘தங்களுக்கான அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி பல ஆண்டுகளாக தொடர்ந்து போராடி வருவதாகவும், ஆனால் பல்கலைக்கழகம் தரப்பில் இருந்து எந்த பதிலும் வரவில்லை’ என்றும் குற்றம்சாட்டி, கோஷங்களை எழுப்பியபடி இருந்தனர். இதையடுத்து போராட்டம் நடத்திய மாணவ மாணவிகளின் சார்பாக 5 பிரதிநிதிகளை சென்னை பல்கலைக்கழக நிர்வாகம் பேச்சுவார்த்தைக்கு அழைத்தது.
இதையடுத்து பல்கலைக்கழக துணைவேந்தர் கவுரி, பதிவாளர் ஏழுமலை மற்றும் சிண்டிகேட் உறுப்பினர்கள் ஆகியோருடன் மாணவ மாணவிகளின் 5 பேர் கொண்ட பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் எவ்வித உடன்பாடும் ஏற்படவில்லை. எனவே மாணவ மாணவிகள் பல்கலைக்கழக துணைவேந்தர் அறையின் முன்பாக திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் உடனே தடுத்து நிறுத்தினர். ஆனாலும் அவர்கள் போலீசாரின் தடுப்பை மீறி துணைவேந்தர் அறையை முற்றுகையிட்டும், அங்கு தரையில் அமர்ந்தும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து மீண்டும் 2 ஆவது கட்ட பேச்சுவார்த்தைக்கு மாணவ மாணவிகளை சென்னை பல்கலைக்கழக நிர்வாகம் அழைத்தது. அப்போது அவர்களுடைய கோரிக்கையை பல்கலைக்கழக நிர்வாகம் நிறைவேற்றி தரும் என்று எழுத்துப்பூர்வமாக தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்று மாணவ மாணவிகள் கலைந்து சென்றனர்.