மாத்திரையில் கம்பி இருந்தது குறித்து முறையாக விசாரிக்க வேண்டும் என பெற்றோர் தரப்பு கோரிக்கை
திருப்பத்தூர் அருகே அரசு ஆரம்பச் சுகாதார நிலையத்தில் 7 வயது சிறுமிக்கு வழங்கப்பட மாத்திரையில் கம்பி இருந்தால் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அருகே உள்ள வேப்பல்நத்தம் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல். இவருடைய 7 வயது மகள் மோனிகா நேற்று திடீரெனக் காய்ச்சல் ஏற்பட்டதால் வெலக்கல்நாத்தம் பகுதியில் உள்ள அரசு ஆரம்பச் சுகாதார நிலையத்திற்குச் சிகிச்சைக்காகச் சென்றுள்ளனர். இவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் காய்ச்சல் என்பதால் பாராசிட்டமால் மாத்திரையைக் கொடுத்து அனுப்பி உள்ளனர்.
மோனிகாவின் பெற்றோர் மாத்திரையை உடைத்து சிறுமிக்குக் கொடுக்க முயன்ற போது, மாத்திரையில் சிறிய கம்பி இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.இதனால் ஆத்திரமடைந்த மோனிகாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அரசு ஆரம்பச் சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்து வந்த திருப்பத்தூர் மாவட்ட சுகாதாரத் துறை இணை இயக்குனர் செந்தில் குமார் 'பாராசிட்டமால் மருந்து பெட்டகத்திலிருந்த அனைத்து மாத்திரைகளையும் திரும்பப் பெற்றுக் கொள்ளப்பட்டது' என வெலக்கல்நத்தம் அரசு ஆரம்பச் சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் அனுவிடம் எழுதி வாங்கிக்கொண்டார்.
அரசு மருத்துவமனையில் வழங்கப்பட்ட பாராசிட்டமால் மாத்திரையின் உள்ளே கம்பி இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் முறையாக விசாரிக்க வேண்டும் என பெற்றோர் தரப்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.