காவல்துறைக்கு முறையாக தகவல் அளிக்கப்பட்டதா, இல்லையா? என்பது குறித்து விசாரணை நடத்தப்படும்
சென்னை, மடிப்பாக்கம் அருகே மூவரசம்பட்டுப் பகுதியில் தர்மலிங்கேஸ்வரர் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் இன்று தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. அப்போது சாமியை நீராட்டும் நிகழ்ச்சிக்காக ஒரே நேரத்தில் 25 அர்ச்சகர்கள் குளத்துக்குள் இறங்கி உள்ளனர்.
அப்போது எதிர்பாராதவிதமாகச் சிலர் நீரில் மூழ்கியுள்ளனர். உடனடியாகத் தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து மீட்புப் பணிகளைத் தொடங்கினர். அதற்குள் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதையடுத்து அவர்களது சடலங்கள் மீட்கப்பட்டன. இதில் ராகவன், லோகேஸ்வரன், பானேஷ், சூர்யா ஆகியோரது உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதுகுறித்துத் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் சம்பந்தப்பட்ட கோயில் குளத்தை ஆய்வு மேற்கொண்டார்.
இதற்கிடையே இந்தச் சம்பவம் குறித்துத் தகவல் அறிந்ததும் அமைச்சர் தா.மோ.அன்பரசன் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். இதன் பின்னர் அமைச்சர் தா.மோ.அன்பரசன் செய்தியாளர்களைச் சந்தித்துக் கூறும்போது, ‘முதலில் ஒருவர் மட்டும் ஆழமான பகுதிக்கு சென்று தவறி விழுந்துள்ளார். அப்போது அருகில் இருந்தவர்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள முயற்சி செய்துள்ளனர். இதில், ராகவன், லோகேஸ்வரன், பானேஷ், சூர்யா, ராகவன் உள்ளிட்ட 5 பேரும் நீரில் மூழ்கி 5 உயிரிழந்துள்ளனர்.
5 பேரும் 20 முதல் 25 வயது கொண்ட படித்த இளைஞர்கள். தகுந்த பாதுகாப்பு இல்லாமல் நிகழ்வை நடத்தியதால்தான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. தகுந்த பாதுகாப்புடன் இந்த நிகழ்வை நடத்தி இருக்க வேண்டும். நான் சட்டமன்றத்தில் இருந்தபோது இந்தத் தகவல் வந்தது. உடனடியாக முதல்-அமைச்சர் கவனத்திற்குக் கொண்டு சென்றேன்.
முதல்-அமைச்சர் நேரில் செல்லுங்கள் என்று கூறினார். முதல்-அமைச்சரின் சார்பில் 5 பேரின் குடும்பத்தினருக்கும் இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இது இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இல்லாத கோயில். நிகழ்வுக்கு முன்பாகக் காவல்துறைக்கு முறையாகத் தகவல் அளிக்கப்பட்டதா, இல்லையா? என்பது குறித்து விசாரணை நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.