வழக்குபதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார் உறுதி
ஆம்பூர் அருகே இருசக்கர வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்திய 17வயது சிறுவனை கைது செய்யக் கோரி இறந்தவர் உடலை சாலையில் வைத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டம்,ஆம்பூர் அடுத்தப் பள்ளித்தெரு பகுதியை சேர்ந்தவர் நாகராஜ்.இவர் நேற்று இரவு பள்ளித்தெரு பகுதியில் தனது இருசக்கர வாகனத்தில் சாலையைக் கடக்க முயன்ற போது,சாலையின் எதிர்புறம் கடாம்பூர் பகுதியை சேர்ந்த டேனிவில்பர்ட் என்ற 17 வயது சிறுவன் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் நாகராஜியின் இருசக்கர வாகனத்தின் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் நாகராஜ் படுகாயமடைந்தார்.அவரை மீட்ட அக்கம்பக்கத்தினர் சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.அங்கு சிகிச்சை பலனின்றி நாகராஜ் உயிரிழந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து,அரசு மருத்துவமனையில் இருந்து பிரேத பரிசோதனை முடிந்து நாகராஜின் உடலை அவரது சொந்த ஊரான பள்ளித்தெரு பகுதியில் அடக்கம் செய்யக் கொண்டு வந்தனர். அப்போது,இருசக்கர வாகன விபத்தை ஏற்படுத்திய மற்றொரு இருசக்கர வாகன ஓட்டியான 17 வயது சிறுவன் மீது காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லையெனக்கூறி நாகராஜின் உடலை ஆம்பூர் - பேர்ணாம்பட் சாலையில் வைத்து அவ்வழியாகச் சென்ற அரசு பேருந்தை சிறைபிடித்துக் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.
இதுகுறித்து,தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ஆம்பூர் துணை காவல்கண்காணிப்பாளர் சரவணன் தலைமையிலான காவல்துறையில் சாலை மறியலில் ஈடுப்பட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டு இச்சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். அதன்பேரில் மறியலை கைவிட்டுப் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
இந்த திடீர் சாலை மறியலால் ஆம்பூர் -பேர்ணாம்பட் சாலையில் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாகப் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.