'கோவிப்பட்டியை தனி மாவட்டமாக' அறிவிக்கக் கோரி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்
தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் கோவில்பட்டியைத் தனியாகப் பிரித்து புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும் என்பது கோவில்பட்டி மக்களின் நீண்ட கால கோரிக்கையாக இருந்து வருகிறது.
கோவில்பட்டி தொகுதியின் எம்.எல்.ஏ-வாகவும் அ.தி.மு.க ஆட்சியில் அமைச்சராகவும் இருந்த கடம்பூர் ராஜூ, கோவில்பட்டியை தனி மாவட்டமாக அறிவிக்க கோரி பலமுறை வலியுறுத்தியுள்ளார்.ஆனால் ஆட்சி மாறியதால் கோரிக்கையைக் கைவிட்டதாகத் தெரிகிறது.
இந்த நிலையில் அந்தப் பகுதியில் உள்ள விவசாயிகள் சங்கத்தினர் அந்த பிரச்சனையை தற்போது கையில் எடுத்து போராடி வருகின்றனர்.தேசிய விவசாயிகள் சங்க மாநில தலைவர் ரங்கநாயகலு தலைமையில் விவசாயிகள் நேற்று கோவில்பட்டியில் ஆர்.டி.ஓ அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இச்சம்பவம் தொடர்பாக நம்மிடம் பேசிய ரங்கநாயகலு,“தூத்துக்குடி மாவட்டம் பிரிக்கப்படுவதற்கு முன்பாக ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டத்தில் கோவில்பட்டி துணை மாவட்ட அந்தஸ்திலிருந்தது. கோவில்பட்டியைத் தலைமை இடமாகக் கொண்டு தபால் கோட்டம் இயங்கி வருகிறது.
இங்குள்ள வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் தொடர்ந்து ஆராய்ச்சிகள் நடந்து வருகிறது. இங்குதான் புதிது புதிதாகப் பருத்தி விதைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இங்குள்ள மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை சிறப்பான முறையில் செயல்படுகிறது. எனவே தான் கோவில்பட்டியைத் தனி மாவட்டமாக உருவாக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறோம்’’ என்றார்.