தர்மபுரி ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் ஆதார் கார்டுகளை வீசி சென்றனர்
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த அரக்காசனல்லி கிராமத்தில் பல்வேறு சமூகத்தைச் சார்ந்த மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு சொந்தமாக 7 ஏக்கர் தரிசு நிலம் உள்ளது. இந்த நிலத்தை முறைகேடான ஆவணங்கள் மூலம் ஆக்கிரமிப்பு செய்து 4 பேர் பயன்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. எனவே கோயில் நிலத்தை மீட்டு பொதுமக்கள் மத்தியில் ஏலம்விட வேண்டும் என, கிராம மக்கள் வலியுறுத்தி வந்தனர்.
இதற்கிடையே பென்னாகரம் வட்டாட்சியர் அலுவலகம் மூலமாக குறுக்கு வழியில் ஆவணங்களை பெற்று சிலர் நிலத்தை விவசாயம் செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், இதுதொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் கிராமத்தில் இருந்து பல்வேறு சமூகத்தைச் சார்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை மீட்டு தர வேண்டும் என வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்தனர். அப்பொழுது மாவட்ட ஆட்சியர், இதுகுறித்து விசாரணை செய்யுமாறு மாவட்ட வருவாய் அலுவலரிடம் அறிவுறுத்தியுள்ளார். இதைத் தொடர்ந்து மாவட்ட வருவாய் அலுவலர் அனிதா, அரக்காசனல்லி கிராம மக்களிடையே விசாரணை நடத்தியுள்ளார்.
அப்பொழுது ‘இந்த கோயில் நிலம் தொடர்பாக நீதிமன்ற வழக்கு இருப்பதால் இதில் மேற்கொண்டு எதுவும் செய்ய முடியாது’ என மாவட்ட வருவாய் அலுவலர் அனிதா தெரிவித்துள்ளார். அதற்கு கிராம மக்கள் ‘நிலத்தை மீட்டுத் தரவில்லை என்றால் குடும்ப அட்டை, ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை திரும்ப அரசிடமே ஒப்படைக்க போகிறோம்’ என தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து மாவட்ட வருவாய் அலுவலர் அனிதா, ‘ஆவணங்களை எங்கே வேண்டுமானாலும் வீசி விட்டுச் செல்லுங்கள். நாங்கள் எதுவும் பண்ண முடியாது’ என அலட்சியமாக தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் தங்களது குடும்ப அட்டை, ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வீசிவிட்டு சென்றனர். இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பான சூழல் நிலவியது.