ஒவ்வொரு நாளும் கட்டுங்கடங்காத அளவுக்கு மணல் கொள்ளை நடைபெறுகிறது
'இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள நெமிலி, துறையூர் மற்றும் பனப்பாக்கம் பகுதிகளில் ஏராளமான அரசு புறம்போக்கு நிலங்கள் மற்றும் பஞ்சமி நிலங்களில் முறைகேடாக மணல் கொள்ளை நடைபெற்று வருகிறது. எனவே, அதை உடனே தடுத்து நிறுத்தவேண்டும்' என சீமான், தமிழக அரசுக்கு கோரிக்கைவிடுத்துள்ளார்.
இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'சென்னை – பெங்களூரு இடையே அதிவிரைவு சாலை அமைக்கும் திட்டத்திற்கு மத்திய அரசின் நெடுஞ்சாலைத்துறை ஒரு தனியார் பெருநிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளது.
தமிழ்நாடு அரசிற்குச் சொந்தமான சிப்காட் நிலங்களிலிருந்தும், ஆதித்தமிழ் குடிகளுக்குச் சொந்தமான பஞ்சமி நிலங்களிலிருந்தும் எவ்வித அனுமதியும் இன்றி முறைகேடாக அதிகளவில் மணலை அந்த நிறுவனம் வெட்டிஎடுக்கின்றது. 40 அடி ஆழத்திற்கும் அதிகமாக மணல் அள்ளப்பட்ட அந்த இடங்கள் தற்போது சுரங்கங்ளைப்போலக் காட்சியளிக்கிறது.
ஒவ்வொரு நாளும் கட்டுங்கடங்காத அளவுக்கு மணல் கொள்ளை நடைபெறுகிறது. இது குறித்துப் பொதுப்பணி மற்றும் வருவாய்த்துறையினரிடமும், மாவட்ட ஆட்சியரிடமும் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மேலும், இது தொடர்பாக புகார் கொடுத்த நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் மிரட்டப்படுகின்றனர். தனியார் பெருநிறுவனங்களுக்கு ஆதரவாகவும், மணல் கொள்ளைக்குத் துணைபோகும் செயல்தான், தி.மு.க. அரசின் திராவிட மாடலா?. எனவே, தமிழ்நாடு அரசு இராணிப்பேட்டை மாவட்டத்தில், நெமிலி, துறையூர், பனப்பாக்கம் பகுதிகளில் மணல் கொள்ளையில் ஈடுபடுபவர்களை உடனே கைது செய்யவேண்டும்.
மேலும், மண்ணையும், மண்ணின் வளங்களையும் காக்க போராடும் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளையும், தொண்டர்களையும் அச்சுறுத்தும் அதிகார அத்துமீறலை தி.மு.க. அரசு கைவிடவேண்டும்' எனத் தெரிவித்துள்ளார்.