ஓ.பன்னீர்செல்வம் உள்பட நான்கு பேரும் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளனர்.
அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கும், பொதுச்செயலாளர் தேர்தலுக்கும் தடை விதிக்க மறுத்த உத்தரவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு சென்னை உயர்நீதிமன்றம் நாளை (மார்ச் 30) விசாரணைக்கு வர உள்ளது.
தனி நீதிபதி உத்தரவின் சான்றளிக்கப்பட்ட நகல் இல்லாததால் மனுவை நாளை விசாரணைக்கு பட்டியலிட நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது சபீக் அமர்வு உத்தரவிட்டுள்ளது.
மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோரின் மனுக்களும் நாளை பட்டியலிடப்பட உள்ளன.
அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு தடை விதிக்கவும், பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்கவும் மறுத்து தனி நீதிபதி குமரேஷ் பாபு அளித்த தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உள்பட நான்கு பேரும் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளனர்.
இதில் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்திருந்த மனு மட்டும் இன்று விசாரணைக்கு வந்தது. தனி நீதிபதி உத்தரவின் சான்றளிக்கப்பட்ட நகல் இல்லாததால் மேல்முறையீட்டு மனுவை நாளை விசாரணைக்கு பட்டியலிட நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
முன்னதாக மற்ற மூவரின் மனுக்கள் பட்டியலிடப்படவில்லை என்றும், அவற்றை சேர்த்து பிற்பகல் விசாரிக்க வேண்டும் என்றும் முறையீடு செய்யப்பட்டது. இதை ஏற்க மறுத்த நீதிபதிகள் மனுக்கள் எண்ணிடப்பட்டால் விசாரணைக்கு பட்டியலிடப்படும் எனத் தெரிவித்தனர்.