நெல்லை ஏ.எஸ்.பி மீதான அதிர்ச்சிப் புகார் தொடர்பான விவகாரத்தில் மனித உரிமை ஆணையம் முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் வெங்கடேசன் என்பவரை கொலை செய்ய முயன்றதாக அளிக்கப்பட்ட புகாரில் காவல்நிலையத்துக்கு விசாரணைக்காக அழைத்துவரப்பட்ட 3 பேரின் பற்களை கிடுக்கிகளை கொண்டு ஏ.எஸ்.பி பல்விந்தர் சிங் பிடுங்கியதாக புகார் எழுந்தது.
மேலும் வாயில் காட்டுமிராண்டித்தனமாக லத்தியால் காவல்துறையினர் தாக்கியதாகவும், இதில் ஒருவருக்கு சமீபத்தில் திருமணம் நடந்ததாக கூறியபோது அவரது விதைப்பையை நசுக்கி கொடுமைப்படுத்தியதாகவும் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வந்தது.
மேலும் நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலும் இந்த சம்பவம் தொடர்பாக புகார் அளிக்கப்பட்டது. இதுகுறித்து நீதி விசாரணை நடத்த கலெக்டர் கார்த்திகேயன் உத்தரவு பிறப்பித்து இருந்த நிலையில் அவரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி தமிழ்நாடு டி.ஜி.பி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பான செய்திகள் நாளிதழ்களில் வெளியாகி தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் இந்த விவகாரத்தில் மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது.
மேலும் இந்த புகார் குறித்து மாநில மனித உரிமைகள் ஆணைய விசாரணை பிரிவு ஐஜி 6 வாரத்திற்குள் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு ஆணையத்தின் தலைவர் பாஸ்கரன் உத்தரவிட்டு இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.