சென்னையை சேர்ந்தவரிடம் ரூ.33 லட்சம் மோசடி செய்த 4 நைஜீரியர்களை போலீசார் மும்பையில் மடக்கிப்பிடித்து கைது செய்துள்ளனர்.
சென்னை, கொளத்தூர் பூம்புகார் நகரை சேர்ந்த விஜயராகவன் என்பவர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக ஒரு புகார் மனு அளித்திருந்தார். அந்த புகாரில், ‘நைஜீரிய நாட்டை சேர்ந்த ஒருவர் இணையதளம் வாயிலாக என்னை தொடர்பு கொண்டு ஆயுர்வேத மூலப்பொருட்கள் வினியோகம் செய்வதற்கு ஒரு வணிகக் கட்டமைப்பு உருவாக்கி இருக்கிறோம்.
இந்த வணிக கட்டமைப்பில் மூலப் பொருட்கள் வாங்குவதற்கு பணம் முதலீடு செய்பவர்களுக்கு அதிக கமிஷன் தொகை தரப்படும்’ என்று ஆசை வார்த்தை கூறினார். இதை உண்மை என்று நம்பி அவர்கள் கூறிய 2 வங்கிக்கணக்குகளில் ரூ.33 லட்சத்து 30 ஆயிரம் பணத்தை 8 பரிவர்த்தனைகள் மூலம் முதலீடு செய்தேன். ஆனால் அந்த நைஜீரியர் கூறியதுபோல் கமிஷன் தொகை தரவில்லை. நான் முதலீடு செய்த பணம் முழுவதையும் மோசடி செய்துவிட்டார்’ என்று அந்த புகாரில் விஜயராகவன் கூறியிருந்தார்.
இதுதொடர்பாக சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின்பேரில் இந்த புகார் மனு மீது மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வங்கி பரிவர்த்தனைகளை வைத்து புலன் விசாரணையை தீவிரப்படுத்தி வந்தனர்.
போலீசாரின் விசாரணையில் சுற்றுலா பயணிகள் என்ற பெயரில் மும்பை கார்கர் பகுதியில் முகாமிட்டு நைஜீரிய கும்பல் இது போன்ற மோசடி செயலை அரங்கேற்றி வருவது தெரிய வந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் மும்பைக்கு விரைந்தனர்.
பின்னர், மோசடி கும்பல் தங்கியிருந்த பகுதியை சுற்றிவளைத்து ஒகோரிகாட்ஸ்வில் சைனாசா (32), உச்சே ஜான் இமேகா (47), காட்வின் இமானுவேல் (32), எபோசி உச்சென்னா ஸ்டான்லி (32) ஆகிய 4 பேரையும் மடக்கிப்பிடித்து அதிரடியாக கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 4 பேரையும் சென்னைக்கு கொண்டு வந்து விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.