என்.எல்.சி-க்கு நிலம் கையகப்படுத்தும் விவகாரம் தொடர்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்துள்ளார்.
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள என்.எல்.சி நிறுவனத்துக்கு நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு தரப்பினர் சார்பில் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது.
இது தொடர்பாக இன்று தமிழக சட்டப்பேரவையில் தி.மு.க, அ.தி.மு.க, காங்கிரஸ், வி.சி.க உள்ளிட்ட கட்சி உறுப்பினர்கள் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர். இந்த தீர்மானத்துக்கு தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பதில் அளித்து பேசினார்.
அப்போது, ‘என்.எல்.சி நிறுவனத்தில் தற்போது 1711 காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளன. இவற்றில் நிலம் அளித்தவர்களுக்கு கூடுதலாக 20 மதிப்பெண்கள் தேர்வில் வழங்கப்படும் என்று என்.எல்.சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஒரு ஏக்கருக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கப்படும். இது தொடர்பான பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தில் உள்ளது. இதை உறுதி செய்ய உயர்மட்ட குழுவை முதல்வர் அமைத்துள்ளார். தமிழ்நாட்டின் மின் தேவையை பெருமளவில் என்.எல்.சி நிறுவனம் பூர்த்தி செய்கிறது.
அடுத்த 5 ஆண்டுக்கு தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்ய நில எடுப்பு அவசியமாக உள்ளது. விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லாத வகையில் நடவடிக்கை எடுத்திட தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.
ரூ.100 கோடி சி.எஸ்.ஆர் நிதியை கடலூர் மாவட்டத்தில் செலவு செய்ய என்.எல்.சி நிறுவனம் ஒப்புதல் தெரிவித்துள்ளது. 60,000 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படவில்லை. தேவைக்கு அதிகமான நிலங்களை கையகப்படுத்தும் பணிகளில் அரசு ஒருபோதும் ஈடுபடாது’ என, தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்தார்.