தமிழ்நாடு அரசின் வேளாண் பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளன.
தமிழ்நாடு அரசின் வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இதில் அவர் கூறியிருப்பதாவது:
வரும் ஆண்டில் விவசாயிகளுக்கு 14 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு கூட்டுறவு பயிர்க்கடன் வழங்கப்படும்.
அதே போல் ஆடு, மாடு, கோழி, மீன் ஆகியவற்றை வளர்க்கும் விவசாயிகளுக்கு வட்டியில்லா கூட்டுறவுக்கடனாக ரூ.1500 வழங்கப்படும்.
பட்டாணி, பீன்ஸ் போன்ற குளிர்கால காய்கறி சாகுபடியை ஊக்குவிக்க விவசாயிகளுக்கு பின்னேற்பு மானியம் வழங்க ரூ.2.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
தண்ணீர் பற்றாக்குறை பகுதியில் நுண்ணீர் பாசன முறையை நிறுவுவதற்கு மானியம் வழங்க ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
சேலம் ஏற்காடு தாவரவியல் பூங்காவை மேம்படுத்த ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
டிராகன், பேரீச்சை, ஆலிவ் போன்ற சிறப்பு பயிர்களின் பரப்பை விரிவாக்கம் செய்ய ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
சென்னை மாதவரம் தோட்டக்கலை பூங்கா ரூ.5 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.
விவசாயிகளை வெளிநாடு அழைத்துச்செல்ல புதிய திட்டம் கொண்டு வரப்படும். வேளாண் தொழில்நுட்பம் குறித்து விவசாயிகள் அயல்நாட்டில் பயிற்சி மேற்கொள்ள ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
தேனியில் ரூ.130 கோடியில் வாழை உற்பத்தி திட்டம் கொண்டு வரப்படும். விவசாயிகளுக்கு 10 லட்சம் பனை விதைகள் வழங்கப்படும்.
உலக சந்தையில் தேனி மாவட்ட வாழைக்கு தனி அடையாளம் உருவாக்க தனி தொகுப்பு திட்டம் அறிமுகம் செய்யப்படும்.
விளைச்சல் குறைந்துள்ள முந்திரி மரங்களை அகற்றி உயர் விளைச்சல் ரக செடிகளை 500 ஏக்கரில் நடவு செய்து புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
பள்ளி மாணவர்களுக்கான பண்ணை சுற்றுலா திட்டத்திற்கு ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
பண்ணை குடும்பங்களுக்கு பழச்செடி தொகுப்பு விநியோகம் செய்ய ரூ.15 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். ஈரோடு கீழ் பவானியில் ஒருங்கிணைந்த நுண்ணீர் பாசனத்திற்கு ரூ.125 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
தமிழகம் முழுவதும் பனை சாகுபடியை ஊக்குவிக்க விவசாயிகள், அரசுசாரா தொண்டு நிறுவனங்களுக்கு ஆற்றங்கரைகள் உள்ளிட்ட பொது இடங்களில் நடவு செய்ய 10 லட்சம் பனை விதைகள் வழங்கப்படும்.
மேலும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த பனை பொருட்களின் மதிப்புக்கூட்டல் ஊக்குவிக்கப்படும்.
இதுபோன்ற பல்வேறு முக்கிய அறிவிப்புகள் தமிழ்நாடு வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.