யானை பாகன்களுக்கு வீடு கட்ட வசதியாக 91 பாகன்களுக்கு தலா ரூ 1 லட்சம் வீதம் ரூ 9.10 கோடி நிதி ஒதுக்கப்படும்
யானை பாகன்களுக்கு வீடு கட்ட வசதியாக 91 பாகன்களுக்கு தலா ரூ 1 லட்சம் வீதம் ரூ 9.10 கோடி நிதி ஒதுக்கப்படும் என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் யானைகள் பராமரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள பாகன் தம்பதி பொம்மன், பெள்ளி ஆகியோரை மையமாக வைத்து இயக்குநர் கார்த்திகி கோன்ஸ்லேவ்ஸ்- ஆல் எடுக்கப்பட்ட 'தி எலிபண்ட் விஸ்பரர்ஸ்' என்ற ஆவணப்படம் ஆஸ்கர் விருதை வென்றுள்ளது.
இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விருது வாங்கிய பாகன் தம்பதியினரை பாராட்டியதோடு, பொம்மன்-பெள்ளியை சந்திக்க அழைப்பு விடுத்திருந்தார். முதலமைச்சரின் அழைப்பின் பேரில் பொம்மன்-பெள்ளி தம்பதியினர் இன்று முதலமைச்சரைத் தலைமை செயலகத்தில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.
அவர்களிடம் தலா ரூ.1 லட்சத்திற்கான காசோலையை முதலமைச்சர் வழங்கியதோடு, யானை பாகன்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் அறிவித்தார். இது தொடர்பாக முதலமைச்சர் வெளியிட்ட அறிவிப்பில், ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள யானைகள் முகாம் ரூ.5 கோடி செலவில் மேம்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளார்.
மேலும் யானை பாகன்களின் பயன்பாட்டிற்கு உகந்த வீடுகள் கட்ட ரூ.9.10 கோடி நிதி உதவி வழங்கப்படும் என்றும் கோவை, சாடிவயலில் புதிய யானைகள் முகாம் ரூ.8 கோடி செலவில் அமைக்கப்படும் என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் 2022-ஆம் ஆண்டு உதகை பயணத்தின் போது முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு யானைகள் முகாமில் "அதிநவீன யானைகள் பாதுகாப்பு மையம் மற்றும் சுற்றுச்சூழல் வளாகம்" ஒன்று ஏற்படுத்தப்படும் என்று ஏற்கனவே அறிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.