தேர்வு எழுதாமல் இருப்போர் எண்ணிக்கை இந்த ஆண்டு 5 சதவீதம் என தகவல்
"கடந்த ஆண்டைப்போல இந்த ஆண்டும், தேர்ச்சி பெறாத மாணவர்கள் உடன், தேர்வுக்கு வராதவர்களையும் சேர்த்து இந்த ஆண்டு சிறப்பு பயிற்சி அளித்து, ஜூன் மாதம் தேர்வு எழுத வைக்கப்படும்" என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.
இது தொடர்பாக தஞ்சையில், செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, "நீட் தேர்வுக்கு எதிராக ஒருபக்கம் சட்டப்போராட்டம் நடைபெற்று வந்தாலும், மாணவர்கள் ஏமாந்து விடக்கூடாது என்பதற்காக நீட் தேர்விற்கான பயிற்சி வழங்கப்பட்டுவருகிறது.
கொரோனா பரவல் காரணமாக 2021 22-ம் ஆண்டு ஒரு லட்சத்து 90 ஆயிரம் மாணவர்கள் இடைநிற்பது கண்டறியப்பட்டு மீண்டும் பள்ளியில் சேர்க்கப்பட்டனர். அந்த மாணவர்களை பள்ளியில் சேர்க்கவில்லை என்றால் பொதுத்தேர்வு இந்த ஆண்டு ஆறு லட்சத்து 70 ஆயிரம்தான் எழுதி இருப்பார்கள். தற்போது 8 லட்சத்து 81 ஆயிரம் பேர் எழுதவேண்டும் என்பதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக 4.5 அல்லது, 4.6 சதவீதம் பேர் தேர்வு எழுதாமல் இருப்பார்கள். இந்த ஆண்டு 5 சதவீதமாக வந்து கொண்டிருக்கிறது. இதற்காக கூடுதல் கவனம் செலுத்தவேண்டும் என்று சொல்லி இருக்கிறோம்.
கடந்த ஆண்டைப்போலவே இந்த ஆண்டும், தேர்ச்சி பெறாத மாணவர் உடன் சேர்த்து தேர்வுக்கு வராதவர்களையும் சேர்த்து சிறப்பு பயிற்சி அளித்து ஜூன் மாதத்தில் தேர்வு எழுத வைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதை சரி செய்யவேண்டிய பொறுப்பு பள்ளிக்கல்வித்துறைக்கு உள்ளது. அதை படிப்படியாக செய்வோம்" என்றார்.