காட்டுப்பள்ளி தனியார் துறைமுகத்திற்கு ’மேத்யூ பெர்ரி’ என்ற அமெரிக்க ராணுவ போர் கப்பல் பழுது பார்க்கும் பணிக்காக வந்துள்ளது.
காட்டுப்பள்ளி துறைமுகத்தில் அமெரிக்க போர்க்கப்பல் பழுது பார்க்கும் பணி நடைபெற்று வருகிறது.
திருவள்ளூர் காட்டூர் அருகே உள்ள காட்டுப்பள்ளியில் தனியாருக்கு சொந்தமான கப்பல் கட்டும் தளத்துடன் கூடிய துறைமுகம் ஒன்று இயங்கி வருகிறது. இங்கு இந்திய கடற்படைக்கு தேவையான ரோந்து கப்பல்கள் கட்டுப்பட்டு வரும் நிலையில், பழுதான கப்பல்களைப் பழுது பார்க்கும் மையமும் செயல்பட்டு வருகிறது.
இந்தியா - அமெரிக்கா புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான 'சார்லஸ்ட்ரு' என்ற ராணுவ தளவாட கப்பல் ஒன்று பழுது காரணமாகவும், அதனை பராமரிப்பு செய்வதற்காகவும் இந்தியாவிற்கு வந்தது.
பின்னர் 10 நாட்கள் தொடர்ந்து பழுது மற்றும் இதரப் பணிகள் செய்யப்பட்டு அந்தக் கப்பல் காட்டுப்பள்ளியில் இருந்து அமெரிக்கா புறப்பட்டு சென்றது. பழுதான நிலையில் ராணுவ கப்பல் முதல் முறையாக இந்தியாவிற்கு வந்து பழுது நீக்கி சென்றது அதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கடந்த 11-ந் தேதி காட்டுப்பள்ளி தனியார் துறைமுகத்திற்கு 2-வதாக ‘மேத்யூ பெர்ரி’என்ற அமெரிக்க ராணுவ போர் கப்பல் பழுது பார்க்கும் பணிக்காக வந்துள்ளது. தொடர்ந்து பழுது பார்க்கும் பணியில் துறைமுக தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பணி வரும் 29-ந் தேதி வரை நடைபெறும் என கூறப்படுகிறது. பின்னர் போர்க்கப்பல் புறப்பட்டு செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது காட்டுப்பள்ளி துறைமுகத்திற்கு 2-வது முறையாக அமெரிக்க ராணுவ போர்க்கப்பல் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.