பணியில் கவனக்குறைவாக இருந்த ஆசிரியர்கள் மீது வழக்கு; மூவர் பணியிடை நீக்கம்
திருச்சியில் மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் சக மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் கைது செய்யப்பட்ட மாணவர்கள், கூர்நோக்கு இல்லத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே பாலசமுத்திரம் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு நேற்று (மார்ச் 10) பள்ளி வளாகத்தில் உட்கார்ந்து படித்துக் கொண்டிருந்த பத்தாம் வகுப்பு மாணவர்கள் ஒருவர் மீது ஒருவர் சிறு கற்களை தூக்கிப்போட்டு விளையாடிக் கொண்டிருந்தார்கள்.
அப்போது ஏற்பட்ட தகராறில், ஒரு மாணவனை மூன்று மாணவர்கள் சேர்ந்து தாக்கியுள்ளனர். அப்போது, கோபி என்பவரின் மகன் மவுலீஸ்வரனின் தலை மரத்தில் மோதியதில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மவுலீஸ்வரன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்தச் சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த ஊர் மக்களும் பெற்றோரும் பள்ளியை முற்றுகையிட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, சம்பவ இடத்துக்கு முசிறி டிஎஸ்பி யாஸ்மின் நேரில் வந்து மாணவர்களிடம் விசாரணை மேற்கொண்டார். மாணவரின் உயிரிழப்புக்கு காரணமான மூன்று மாணவர்கள் மீதும் கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சம்பவம் நடந்த நேரத்தில் பள்ளியில் பணியில் இருந்த தலைமை ஆசிரியை ஈஸ்வரி, ஆசிரியர் ராஜேந்திரன், ஆசிரியை வனிதா ஆகியோர், பணியில் கவனக்குறைவாக இருந்ததாகக் கூறி அவர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் மூவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள்.
மாணவர் கொலைச் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சிறுவர்கள் மூன்று பேரும் திருச்சி சிறார் கூர்நோக்கு மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.