கல்லூரி மாணவர்கள், படியில் ஆபத்தான வகையில் தொங்கிக்கொண்டு பயணம்
தனியார் பேருந்தில் கல்லூரி மாணவர்கள் ஒவ்வொரு நாளும் ஆபத்தான முறையில் படியில் தொங்கியபடி பயணம் செய்வதை உடனடியாக தடுத்து நிறுத்தவேண்டும் என தனியார் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநருக்கு அ.தி.மு.கவைச் சேர்ந்த பெருந்துறை சட்டமன்ற உறுப்பினர் ஜெயக்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.
கோவையில் இருந்து ஈராேட்டிற்கு தினசரி ஏராளமான அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயங்கி வருகிறது. தனியார் பேருந்தில் கட்டணம் குறைவு என்பதாலும், அரசு பேருந்தைவிட மிகவேகமாக செல்வதாலும், பெரும்பாலான பொதுமக்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் தனியார் பேருந்தில் பயணம் செய்வதை விரும்புகின்றனர்.
இந்த நிலையில், இன்று காலை 9 மணி அளவில் கோவையில் இருந்து ஈரோட்டிற்கு ஒரு தனியார் பேருந்து வேகமாக வந்து கொண்டு இருந்தது. அந்த பேருந்து விஜயமங்கலம் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது ஏராளமான கல்லூரி மாணவர்கள், படியில் ஆபத்தான வகையில் தொங்கிக்கொண்டு பயணம் செய்தனர்.
மேலும், பேருந்து வளைவில் திரும்பும்போது, மாணவர்களின் கால் தரையில் உரைந்து கொண்டுவந்தது. இதை பேருந்துக்கு பின்னால் காரில் வந்துகொண்டிருந்த பெருந்துறை சட்டமன்ற உறுப்பினர் ஜெயக்குமார் கவனித்துள்ளார்.
பின்னர், டோல்கேட் பகுதிக்கு வந்த பேருந்தை மடக்கி, அதில் இருந்த ஓட்டுநர் மற்றும் நடத்துநரை கீழே இறக்கி, "பேருந்து படியில் மாணவர்கள் ஆபத்தான வகையில் தொங்கிக்கொண்டு பயணம் செய்கின்றனர். அதை நீங்கள் அனுமதிக்கக் கூடாது. அப்படி செய்வது சட்டத்திற்கு புறம்பானது. எனவே, மீண்டும் ஒரு முறை இப்படி நடந்தால், வட்டாரப்போக்குவரத்து அலுவலரிடம் நான் சட்டப்படி புகார் செய்வேன்" என அவர்களை எச்சரித்து அனுப்பினார். மேலும், பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ளுமாறு மாணவர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.