'இங்கு எங்களுக்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை'
தமிழ்நாட்டில் பாதுகாப்பாக உள்ளதாக வாணியம்பாடியில் நடைபெற்ற ஆலோசனைக்கூட்டத்தில் வடமாநில தொழிலாளர்கள் தங்கள் உறவினர்களுடன் வீடியோ காலில் பேசினர்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி உட்கோட்ட பகுதியில் உள்ள வாணியம்பாடி, நாட்றம்பள்ளி, ஆலங்காயம் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெளி மாநில புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் இங்குள்ள காலணி தொழிற்சாலைகள், தோல் தொழிற்சாலைகள், உணவகங்கள், கட்டுமான பணிகள், ஹாலோ பிரிக்ஸ் தொழிற்சாலை பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் புலம் பெயர்ந்த வெளி மாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும் பணிபுரிவதை உறுதிப்படுத்தும் வகையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள தொழிலாளர் நலத்துறை ஆணையர் மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இதைத்தொடர்ந்து, திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் பாலகிருஷ்ணன் வாணியம்பாடியில் உள்ள தனியார் திருமண மண்டலத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுடன் கலந்துரையாடினார்.
அப்போது போலீசார் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி, அவர்களது உறவினர்களிடம் வீடியோ கால் மூலம் தொழிலாளர்களை பேச வைத்து பாதுகாப்பை உறுதிப்படுத்தினார். இதில் பேசிய வடமாநில தொழிலாளர்கள், “நாங்கள் தமிழ்நாட்டில் பாதுகாப்பாக இருக்கிறோம். இங்கு எங்களுக்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை. போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர்” என்று தெரிவித்தனர்.