பாதிக்கப்பட்ட கிராமத்திற்கு நேரில் சென்று ஆய்வு
தருமபுரி மாவட்டம், வாச்சாத்தி மலைக் கிராமத்தில் சந்தனமரங்களைப் பதுக்கி வைத்துள்ளதாகக் கூறி கடந்த 1992ம் ஆண்டு ஜூன் 20ம் தேதி வனத்துறையினர், போலீஸார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். அந்தக் கிராமத்தில் இருந்த 18 பெண்களை அதிகாரிகள் பாலியல் வன்கொடுமை செய்ததாக அதிர்ச்சிக் குற்றச்சாட்டு எழுந்தது.
இச்சம்பவம் குறித்து சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. வழக்கை விசாரித்த சி.பி.ஐ., வனத்துறை உயர் அதிகாரிகள் 4 பேர் உள்பட காவல்துறையினர், வருவாய்த் துறையினர் என 215 பேர் மீது பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பல்வேறு சட்டப்பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கின் விசாரணையின்போது, குற்றம் சுமத்தப்பட்ட ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் இறந்துவிட்டனர். மீதமுள்ளவர்களுக்கு ஓர் ஆண்டு முதல் 10 ஆண்டுகள் வரை தண்டனை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து தண்டனை பெற்றவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வேல்முருகன், அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்ததை வழக்கை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தார்.
இந்நிலையில், இன்று தருமபுரிக்கு வருகை தந்த நீதிபதி வேல்முருகன், சம்பவம் நடந்த வாச்சாத்தி, கலசப்பாடி, அரசநந்தம் உள்ளிட்ட மலைக் கிராம மக்களை நேரில் சந்தித்து அவர்களிடம் விசாரணை நடத்தினார்.