ஏடிஎம் கொள்ளைக்கு முக்கிய காரணமாகக் கருதப்படும் குற்றவாளி கைது
திருவண்ணாமலை தொடர் ஏடிஎம் கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளி நிஜாமுதீனை போலீசார் சென்னையில் வைத்து கைது செய்துள்ளனர். தற்போது இந்த வழக்கில் கைது எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 12ஆம் தேதி அதிகாலையில் நான்கு ஏ.டி.எம் எந்திரங்களை கேஸ் வெல்டிங் மூலம் வெட்டி எடுத்து 72 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்ட விவகாரத்தில் அரியானா மாநிலத்தைச் சேர்ந்த ஆரிப், ஆசாத் ஆகிய இருவரும் கைது வேலூர் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டனர்.
கொள்ளையர்களுக்கு உதவியதாக கோலார் பகுதியைச் சேர்ந்த குதரத் பாஷா, அப்சர் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு ஏற்கனவே வேலூர் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
ஏடிஎம் கொள்ளைக்கு முக்கிய காரணமாகக் கருதப்படும் குற்றவாளியான நிஜாமுதீனை தனிப்படை போலீசார் தீவிரமாகத் தேடி வந்தனர்.
இந்நிலையில், கோலார் பகுதியைச் சேர்ந்த நிஜாமுதீனை தனிப்படை போலீசார் தற்பொழுது சென்னையில் வைத்து கைது செய்துள்ளனர்.