வேறு எங்காவது கைவரிசை காட்டியுள்ளனரா? என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்
மதுபோதையில் திருட வந்ததை மறந்து கோயிலுக்குள் 2 கொள்ளையர்கள் தூங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தருமபுரி மாவட்டம் மான்காரன் கொட்டாய் கிராமத்தில் சிவன் கோவில் உள்ளது. கோவில் வழியாகத் திங்கள் கிழமை அன்று காலையில் சென்றவர்கள் கோவிலின் கதவு பூட்டு உடைக்கப்பட்டுத் திறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
அவர்கள் கோவிலுக்கு உள்ளே சென்று பார்த்த போது அங்கு 2 ஆசாமிகள் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தனர். இதுகுறித்து மதிகோன்பாளையம் காவல்துறைக்குக் கிராம மக்கள் தகவல் தெரிவித்தனர்.
போலீசார் விரைந்து வந்து அவர்கள் இருவரையும் அழைத்துச் சென்று விசாரித்தனர். அப்போது அவர்கள் கூறுகையில், கோவிலுக்கு அருகே கட்டப்பட்டு வரும் பள்ளிக் கூடத்தில் பொருட்களைத் திருட நேற்று முன்தினம் வந்ததாகவும், நாய்கள் குறைத்ததால் அங்கிருந்து ஓட்டம் பிடித்துவிட்டதாகவும் கூறினர்.
மேலும், இரவு கோவிலில் திருட முயற்சி செய்து பூட்டை உடைத்த போதும் அப்பகுதியில் உள்ள நாய்கள் ஒன்று சேர்ந்து குறைத்ததால் வெளியே வரப் பயந்து கொண்டு கோவிலுக்குள்ளேயே இருந்ததாகவும், பின்னர் குடிபோதையில் தூங்கி விட்டதாகவும் தெரிவித்தனர்.
தொடர்ந்து இருவரிடமும் அவர்கள் வேறு எங்காவது கைவரிசை காட்டியுள்ளனரா? என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திருட வந்து போதையில் கோவிலுக்குள்ளேயே தூங்கி, திருடர்கள் சிக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது