ஈரோடு கிழக்கில் தற்காலிக சட்டவிரோத கொட்டகைகளை அகற்றக்கோரி ஐகோர்ட்டில் வழக்கு

ஈரோடு கிழக்கில் தற்காலிக சட்டவிரோத கொட்டகைகளை அகற்றக்கோரி ஐகோர்ட்டில் வழக்கு
ஈரோடு கிழக்கில் தற்காலிக சட்டவிரோத கொட்டகைகளை அகற்றக்கோரி ஐகோர்ட்டில் வழக்கு

விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது

ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்காளர்களைச் சட்டவிரோதமாக அடைத்து வைப்பதற்காகத் தற்காலிக கொட்டகைகளை அமைக்கப்பட்டிருப்பதாக குற்றம்சாட்டியும், அவற்றை அகற்றக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதியின் சுயேச்சை வேட்பாளர் ஏ.ரவி என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், ஆளும் திமுக கட்சி அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் வேட்பாளரை வெற்றிபெறச் செய்வதற்காகச் சட்டவிரோதமாகவும், அரசியலமைப்பிற்கு எதிராகவும் பல நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும், அரசு அதிகாரிகள் ஆளும்கட்சியின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளதாகவும், தேர்தல் ஆணையம் சட்டவிரோத செயல்களுக்கு உறுதுணையாக இருப்பதாகவும் மனுவில் தெரிவித்துள்ளார்.

மேலும், 150க்கும் மேற்பட்ட தற்காலிக கொட்டகைகள் அமைக்கப்பட்டு, வாக்களர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், திருமண மண்டபம் மற்றும் சமுதாயக் கூடங்களிலும் வாக்காளர்களுக்குப் பணம், மதுபானம் மற்றும் பிற பொருட்களை விநியோகிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

மற்ற அரசியல் கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்களோ அல்லது மற்ற சுயேச்சை வேட்பாளர்களோ இந்தக் கொட்டகைகளை அணுக முயன்றால், கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று அச்சுறுத்தப்பட்டுவதாகவும் தெரிவித்துள்ளார்.

இன்னும் சில நாட்களில் பிரசாரம் முடிவடையவுள்ள நிலையில், வாக்காளர்கள் மற்ற கட்சி உறுப்பினர்களைச் சந்திக்காமல் இருக்க அவர்களுக்கு உணவு வழங்கி மாலை வரை கொட்டைகளில் தங்க வைக்கப்படுவதாகவும், இதன்மூலம் தேர்தல் நடத்தை விதிகளை ஆளும் கட்சி உறுப்பினர்கள் தைரியமாக மீறுவதால் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை நடத்துவதைப் பாதித்துள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

தற்காலிமாக அமைக்கப்பட்டுள்ள கொட்டகைகளில் அதிகாரிகளின் எந்த அனுமதியும் பெறாமலும், எந்தவித பாதுகாப்பு வழிமுறைகளையும் பின்பற்றாமலும் ஆயிரக்கணக்கான மக்கள் அடைத்து வைக்கப்பட்டிருப்பதாகவும், தீயணைப்பு கருவிகள் எதுவும் அமைக்கப்படாமலும், நுழைவு மற்றும் வெளியேறும் வாயில்கள் இல்லாமலும் உள்ளதால், பேரழிவுக்கு வழிவகுக்கும் என அச்சம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்திற்குப் பிப்ரவரி 16ம் தேதி மனு அளித்தும் அதன்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனத் தெரிவித்துள்ளார். எனவே சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள கொட்டகைகளை அகற்றக்கோரியும், வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் இலவசங்கள் வழங்குவதைத் தடுக்கவும், இடைத்தேர்தல் நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்தவும் உத்தரவிட வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளார்.இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com