6 சவரன் நகைக்காக கொலை... நடந்தது என்ன?

6 சவரன் நகைக்காக கொலை... நடந்தது என்ன?
6 சவரன் நகைக்காக கொலை...  நடந்தது என்ன?

ரேவதி தனது அத்தை தையல் நாயகியை, முகத்தில் போர்வையால் அழுத்தி கொலை செய்துள்ளார்

கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்துள்ள சிறுகரம்பலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தையல் நாயகி (67) இவரது கணவர் மாணிக்கம்  இறந்துவிட்டார். இவர்களுக்குக் குழந்தை இல்லாத நிலையில் தனியாக வசித்து வந்துள்ளார். நேற்று கூலி வேலைக்குச் சென்று விட்டு இரவு வீட்டில் தூங்கிய தையல் நாயகி காலையில் வெகு நேரம் ஆகியும் வெளியே வராததால் அருகில் உள்ளவர்கள் அவருடைய வீட்டிற்குச் சென்று பார்த்துள்ளனர். அப்போது  தையல் நாயகி கட்டிலில்  இறந்த நிலையில் கிடப்பதைப் பார்த்து  அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் வேப்பூர் காவல் நிலையத்திற்குத்  தகவல் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் உடலை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தியதில், தையல் நாயகியின் சொந்த தம்பி மகளான பெரம்பலூர் மாவட்டம் V.களத்தூர் பகுதியைச் சேர்ந்த ரேவதி என்பவர் சம்பவம் நடந்த அன்று இரவு தையல் நாயகியின் வீட்டிற்கு வந்து சென்றது தெரிய வந்தது.
இதனையடுத்து ரேவதியைப் பிடித்து காவல்துறை விசாரணை செய்ததில் மூதாட்டி தையல் நாயகி அணிந்திருந்த ஆறு சவரன் தங்க நகைக்கு ஆசைப்பட்டு கடலூர் மாவட்டம் பெண்ணாடம் பகுதியைச் சேர்ந்த  சுதாகரன் என்பவருடன் சேர்ந்து அத்தை தையல் நாயகியை,  முகத்தில் போர்வையால் அழுத்தி கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார்.
இதனையடுத்து ரேவதியின் கூட்டாளியான சுதாகரனையும் பிடித்து அவரிடம் இருந்த 6 சவரன் நகையைப் பறிமுதல் செய்து இருவர் மீதும் கொலை வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
தங்க நகைக்காக சொந்த அத்தையை தம்பி மகளே கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com