தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே இன்று பள்ளி வாகனமும், காரும் நேருக்குநேர் பயங்கரமாக மோதி விபத்துக்கு உள்ளாகின. இந்த விபத்தில் கார் முழுவதுமாக சேதமடைந்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த குருசாமி (45), அவரது மனைவி வேலுத்தாய் (35) மாமியார் உடையம்மாள் (60) குருசாமியின் மகன் மனோஜ் குமார் (22) உள்ளிட்ட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும், பள்ளி வாகனத்தில் இருந்த 5க்கும் மேற்பட்ட குழந்தைகள் படுகாயம் அடைந்து அலறினர். இதையறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இறந்தவர்களின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பினர்.
மேலும் படுகாயம் அடைந்த பள்ளிக் குழந்தைகளை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து தகவலறிந்து போலீஸ் எஸ்.பி சம்பவ இடத்துக்கு நேரில் வந்து ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து விபத்தில் சிக்கிய 2 வாகனங்கள் உடனடியாக பொக்லைன் வாகனங்களின் மூலம் அப்புறப்படுத்தப்பட்டன.
முதற்கட்ட விசாரணையில், பெட்ரோல் பங்க் அருகே பள்ளி வாகனம் திரும்பியபோது எதிரில் வேகமாக வந்த கார் திடீரென, பள்ளி வாகனம் மீது மோதி விபத்து ஏற்பட்டது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.