நீதிமன்றம் உத்தரவிட்டும் சட்டவிரோத மணல் திருட்டு நடைபெறுவது எப்படி? - நீதிபதிகள் கேள்வி
நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரும் சட்டவிரோத மணல் திருட்டு நடைபெறுவது எப்படி என நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.
கரூர் மாவட்டம், சாணிபிரட்டி கிராமத்தை சேர்ந்த குணசேகரன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுவினை தாக்கல் செய்திருந்தார்.
அதில், "தமிழ்நாடு, கேரள எல்லைப் பகுதியில் அமராவதி ஆறு உருவாகிறது. அமராவதி ஆறு திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டத்திற்கு குடிநீர் மற்றும் விவசாய தேவையை பூர்த்தி செய்கிறது.
அமராவதி ஆற்றின் கரையில் 10 முதல் 15 அடி ஆழம் வரை தோண்டி மணல்கள் திருடப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் மாட்டு வண்டிகளைக் கொண்டும் ஆற்றுக்கு செல்வதற்கு பாதைகள் அமைத்தும் ஆற்று மணலை திருடி வருகின்றனர்.
சட்டவிரோதமாக ஆற்று மணலை திருடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. எனவே, அமராவதி ஆற்றில் சட்டவிரோதமாக மணல் எடுப்பதை தடுக்கவும், மணல் எடுப்பதற்காக ஆற்றில் போடப்பட்ட பாதையை அகற்றவும் உத்தரவிட வேண்டும்" என மனுவில் தெரிவித்திருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அதன்படி நீதிமன்றம் உத்தரவிட்டும் சட்டவிரோத மணல் திருட்டு நடைபெறுவது எப்படி?. தமிழகம் முழுவதும் சட்டவிரோத மணல் திருட்டு என்பதே இருக்கக் கூடாது. தமிழக அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.