ராமேஸ்வரத்தில் முறையான ஆவணங்கள் இன்றி இலங்கைக்கு செல்ல முற்பட்ட ஒருவர், அவருக்கு உதவி செய்த மற்றொருவர் என 2 பேரை போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
ராமேஸ்வரத்தில் முறையான ஆவணங்கள் இன்றி இலங்கைக்கு செல்ல முற்பட்ட ஒருவர், அவருக்கு உதவி செய்த மற்றொருவர் என 2 பேரை கியூப்பிரிவு போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இலங்கை வவுனியா பகுதியைச் சேர்ந்த கீர்த்திகன் என்பவர் கடந்த 2020ஆம் ஆண்டு இலங்கையிலிருந்து பாஸ்போர்ட் மூலம் சென்னைக்கு வந்துள்ளார். அங்கிருந்து லண்டன் செல்ல முற்பட்டபோது செல்ல முடியாத காரணத்தினால் போலியாக இந்திய ஆதார் கார்டு மற்றும் பாஸ்போர்ட் தயார் செய்துள்ளார். பின்னர் லண்டன் செல்வதற்காக வங்கதேசத்துக்கு சென்று அங்கிருந்து லண்டன் செல்ல முற்பட்டபோது வங்கதேச போலீசாரால் சிறைப்பிடிக்கப்பட்டு 7 மாதங்கள் வங்கதேசத்தில் சிறையில் இருந்துள்ளார்.
இதையடுத்து வங்கதேசத்தில் இருந்து மீண்டும் இந்தியாவிற்குள் வந்து பின்னர் சென்னையில் இருந்து ராமேஸ்வரம் வந்த கீர்த்திகன் இலங்கை செல்ல முற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இலங்கை செல்வதற்கு கீர்த்திகனுக்கு உதவி செய்வதாக ராமேஸ்வரம் அடுத்த புதுரோடு பகுதியை சேர்ந்த முத்துக்குமரன் 30 ஆயிரம் ரூபாய் பணத்தை வாங்கி உதவி செய்ய முற்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து கியூப்பிரிவு போலீசார் கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சென்னையில் இருந்து ராமேஸ்வரத்திற்கு ரயில் மூலம் வந்த இலங்கையை சேர்ந்த கீர்த்திகனை கியூ பிரிவு போலீசார் கைது செய்து பின்னர் அவருக்கு உதவ முற்பட்ட முத்துக்குமரனின் கைது செய்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.