“காப்பற்றுங்கள்” என கேட்ட குரல்: அதிரடி ஆக்ஷன் காட்டி காப்பாற்றிய போக்குவரத்து போலீசார்.
T-15 SRMC போக்குவரத்து காவல் நிலைய தலைமைக் காவலர்கள் P.லிங்ககுமார் மற்றும் M.பேச்சிமுத்து ஆகியோர் கடந்த 06.07.2021 அன்று இரவு சுமார் 9.15மணியளவில் போரூர் செட்டியார் அகரம் சிக்னலில்போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சிக்னலில் நின்று கொண்டிருந்த காரிலிருந்த ஒருவர், போலீசாரை கண்டதும் “காப்பற்றுங்கள்” என கூறி கத்தியுள்ளார். அங்கு பணியிலிருந்த போக்குவரத்து தலைமைக்காவலர்கள் லிங்க குமார், பேச்சி முத்து ஆகிய இருவரும் காரை வழிமறித்து மடக்கி பிடித்து விசாரணை செய்து காரிலிருந்த ரியாஷ் அலியை என்பவரை உடனடியாக மீட்டனர். விசாரணையில் ரியாஷ் அலி(39) என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் மாங்காடு, பரணிபுத்தூர் மேம்பாலம் அருகே சென்று கொண்டிருந்த போது, காரில் வந்த 3 நபர்கள் ரியாஷ் அலியை காரில் வலுக்காட்டாயமாக கடத்தியது தெரிய வந்தது. கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட ராஜா, சுரேஷ், சரவணன் ஆகிய 3 நபர்களை கைது செய்து மாங்காடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவர்களிடமிருந்து 1 கத்தி, 1 இரும்புராடு, 3 செல்போன்கள் மற்றும் 1 கார் கைப்பற்றப்பட்டது. அதன்பின் குற்றவாளிகள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பணியில் விழிப்புடன் செயல்பட்டு காரில் கடத்தி செல்லப்பட்ட நபரை மீட்டு 3 கடத்தல் குற்றவாளிகளை கைது செய்த T15 SRMC போக்குவரத்து காவல் நிலைய தலைமைக் காவலர்களை சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு.சங்கர் ஜிவால் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.