மணிகண்டனின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு.
அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு எதிராக துணை நடிகை சாந்தினி பாலியல் புகார் அளித்தார். திருமணம் செய்து கொள்வதாக கூறி தன்னை ஏமாற்றி மூன்று முறை கருக்கலைப்பு செய்ததாக புகாரில் குறிப்பிட்டிருந்தார்.
துணை நடிகை அளித்த புகாரின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது 5 பிரிவுகளின் கீழ் அடையாறு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். புகாரின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் மணிகண்டனை, அடையாறு அனைத்து மகளிர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில், மணிகண்டன் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, மணிகண்டன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு திருமணமாகி குழந்தைகள் இருக்கும் நிலையில், ஐந்து ஆண்டுகள் அவருடன் நடிகை கணவன்-மனைவியாக வாழ்ந்துள்ளனர். பாலியல் வன்கொடுமை என கூற முடியாது. கருக்கலைப்பு நடிகையின் ஒப்புதலுடன் நடந்துள்ளது. எந்த அந்தரங்க படங்களையும் வெளியிடவில்லை என வாதிட்டார்.
நடிகை சாந்தினி தரப்பில், மனைவியை விவாகரத்து செய்து விட்டு திருமணம் செய்து கொள்வதாக கூறியதால் அவருடன் கணவன்- மனைவியாக வாழ தொடங்கியதாகவும், சட்டமன்றத்துக்கும் தன்னுடைய மனைவி என அறிமுகப்படுத்தி சாந்தினியை அழைத்துச் சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டது.
காவல் துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மணிகண்டனை காவலில் வைத்து விசாரணை நடத்தியதில் நடிகைக்கு படங்கள் அனுப்ப பயன்படுத்தப்பட்ட மொபைல் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. எனவே சாட்சிகளை கலைக்கக் கூடும் என்பதால், அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என கூறப்பட்டது.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மணிகண்டன் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.