சுசீல்ஹரி சர்வதேச பள்ளியில் படித்த மாணவிகளுக்கு, பாலியல் தொல்லை அளித்ததாக அந்த பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டார். சிவசங்கர் பாபாவுக்காக மாணவிகளை மூளை சலவை செய்ததாக அவரது பக்தை சுஷ்மிதாவும் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த பள்ளியின் ஆங்கில ஆசிரியை தீபா வெங்கடராமன், பள்ளி நிர்வாகி ஜானகி சினிவாசன், பக்தைகள் கருணாம்பிகை, திவ்யா மற்றும் பாரதி ஆகியோர் முன் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுக்கள் இன்று விசாரணைக்கு வந்தபோது, மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்ட வாக்குமூலத்தை அறிக்கையாக போலீசார் தாக்கல் செய்தனர்.
சிவசங்கர் பாபா மீதான குற்றச்சாட்டுகளில் இவர்களுக்கு எந்த நேரடி தொடர்பும் இல்லை என கூறி ஐந்து பேருக்கும் நிபந்தனை ஜாமீன் அளித்து நீதிபதி உத்தரவிட்டார்.
2 வாரங்களுக்கு ஐந்து பேரும் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்றும், தங்களது பாஸ்போர்ட்டை விசாரணை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் எனவும் நீதிபதி நிபந்தனை விதித்து உத்தரவிட்டுள்ளார்.