கர்ப்பிணி பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை.
பெரம்பலூர் அருகே கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஒன்றியம் ஓகளூர் பகுதியை சேர்ந்த அருண்குமார் என்பவர் சென்னையில் உள்ள உணவகம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். இவருக்கு லலிதா (24) என்ற மனைவியும், 10 மாத ஆண் குழந்தையும் உள்ளது. லலிதா 2 மாத கர்ப்பிணியாக இருந்தார்.
இந்த நிலையில், கடந்த 2ஆம் தேதி அன்று அருண்குமார் விடுமுறையில் வீட்டுக்கு வந்திருக்கிறார். நேற்று மாலை 6 மணியளவில் அருண்குமாரின் உறவினர் ஜெயந்தி என்பவர் லலிதாவை பார்க்க அவரது வீட்டுக்கு சென்றுள்ளார்.
அப்போது, கதவு உள்புறமாக பூட்டப்பட்டிருந்தது. ஜெயந்தி நீண்ட நேரமாக கதவை திறக்காததால், அருண்குமார் கதவை உடைத்து பார்த்துள்ளார். லலிதா தூக்கில் சடலமாக தொங்கி கொண்டிருந்தார். இதனை கண்ட அவர் தப்பியோடினார்.
கிராம மக்கள் மங்களமேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து போலீசார் உடலை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பியோடிய அருணை தேடி வருகின்றனர்.