மதுரை சிறுமியை கடத்தி வந்து குடும்பம் நடத்திய ரவுடி போக்சோ சட்டத்தில் கைது.
மதுரையை சேர்ந்த சிறுமியை கடத்தி வந்து குடும்பம் நடத்திய ரவுடி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
சென்னை காசிமேடு காசிபுரத்தைச் சேர்ந்தவர் லோகேஷ் என்ற தேசப்பன் (வயது 21) என்ற ரவுடி மீது 2 கொலை வழக்குகள் உள்பட பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர், அடிக்கடி சபரிமலைக்கு சென்று வருவது வழக்கம்.
சபரிமலைக்கு செல்லும்போது, மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகில் உள்ள ஒரு குறிப்பிட்ட கடையில் பொருட்கள் வாங்குவது வழக்கம். 3 ஆண்டுகளுக்கு முன்பு அந்த கடை உரிமையாளரான பாட்டியின் 14 வயது பேத்தியுடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இருவரும் செல்போனில் பேசி வந்துள்ளனர். கடந்த 5 மாதங்களுக்கு முன்பு தேசப்பன், அந்த சிறுமியை ரகசியமாக சென்னைக்கு கடத்தி வந்து குடும்பம் நடத்தி இருக்கிறார். தற்போது 17 வயதான அந்த சிறுமி, 5 மாதம் கர்ப்பமாகி இருக்கிறார்.
இது குறித்து அக்கம் பக்கத்தினர் குழந்தைகள் நல அலுவலருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். போலீசார் துணையுடன் அவர்கள் வீட்டுக்கு குழந்தைகள் நல அலுவலர் சென்றபோது, அதிர்ச்சி தகவல் வெளியானது.
தேசப்பன் அந்த சிறுமியை திருமணம் செய்யாமல் ரகசியமாக குடும்பம் நடத்தியது தெரியவந்தது. இதற்கு தேசப்பனின் தாய் கீதா உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது.
கீதா மற்றும் தேசப்பன் கைது செய்யப்பட்டனர். தேசப்பன் மீது போக்சோ சட்டத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். சிறுமியை மீ்ட்டு அரசு காப்பகத்தில் அனுமதித்தனர்.