தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் வேகம் சற்று குறைந்துள்ளது: தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்
கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் வேகம் சற்று குறைந்துள்ளது என தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
கொரோனா தொற்று பரவல் நிலவரம் குறித்து சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ராதாகிருஷ்ணன், "தமிழகத்தில் அமல்படுத்தப்பட்ட ஞாயிற்றுக்கிழமை முழு பொது முடக்கத்தால் கொரோனா பரவலின் வேகம் சற்று குறைந்திருக்கிறது. கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு வேகம் குறைந்துள்ளது. அடுத்த சில நாள்களுக்கு மக்கள் தேவையின்றி வெளியே வரக் கூடாது என்றார்.
மேலும் பேசிய அவர், தமிழகத்தில் அமல்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகள் காரணமாக மிகத் தீவிரமாக பரவி வந்த கொரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ளது. பொது நிகழ்ச்சிகளில் மக்கள் கலந்துகொள்வதை குறைத்துக் கொள்வது, தொற்றுப் பரவலை கட்டுப்படுத்தப் பெரிதும் உதவும். மாஸ்க் அணியாமல் பொதுமக்கள் யாரும் வெளியே வர வேண்டாம். தேவையின்றி, பொதுமக்கள் வெளியே வருவதைத் தவிர்க்க வேண்டும். தொடர்ந்து கொரோனா கட்டுப்பாட்டை தீவிரமாக பின்பற்றினால் கொரோனா பரவல் குறையும் நிலையை எட்டலாம்" என கூறினார்.