3 லட்சம் மாணவர்கள் புத்தக வாசிப்பு: தருமபுரி பள்ளி, கல்லூரி மாணவர்கள் அசத்தல்

"தருமபுரி வாசிக்கிறது" என்ற புத்தக வாசிப்பு விழிப்புணர்வு நிகழ்வை மாவட்ட ஆட்சித் தலைவர் தொடங்கி வைத்தார்.
புத்தக வாசிப்பில் மாணவர்களுடன் மாவட்ட ஆட்சித் தலைவர்
புத்தக வாசிப்பில் மாணவர்களுடன் மாவட்ட ஆட்சித் தலைவர்

தருமபுரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் புத்தகத் திருவிழாவை தருமபுரி மாவட்ட நிர்வாகம் தகடூர் புத்தகப் பேரவை மற்றும் பாரதி புத்தகாலயம் இணைந்து நடத்தி வருகிறது. இந்த புத்தகத் திருவிழா தருமபுரி மாவட்ட பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு தருமபுரி புத்தகத் திருவிழா செப்டம்பர் 8ம் தேதி முதல் 17ம் தேதி வரை தருமபுரி வள்ளலார் திடலில் நடைபெற உள்ளது.

இது தொடர்பாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடை விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தருமபுரி அரசு மேல்நிலைப் பள்ளியில் "தருமபுரி வாசிக்கிறது" என்ற புத்தக வாசிப்பு விழிப்புணர்வு நிகழ்வை மாவட்ட ஆட்சித் தலைவர் கி.சாந்தி நேற்று தொடங்கிவைத்தார்.

மாவட்ட ஆட்சித் தலைவர் கி.சாந்தி
மாவட்ட ஆட்சித் தலைவர் கி.சாந்தி

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சித் தலைவர் சாந்தி, "தருமபுரி வாசிக்கிறது என்ற நிகழ்வை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் நேற்று ஆசிரியர் தினத்தில் தருமபுரி மாவட்டத்தில் உள்ள 29 கல்லூரிகளிலும், 1607 பள்ளிகளிலும் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்வில் சுமார் 3 லட்சம் மாணவ, மாணவிகள் பங்கேற்றுள்ளனர்.

இந்த நிகழ்வில் சுமார் 20 நிமிடங்கள் மாணவர்கள் புத்தகங்களை வாசித்துள்ளனர். இந்த புத்தகத் திருவிழாவில் 100க்கும் மேற்பட்ட புத்தக அரங்குகள் இடம் பெறுகிறது. நாள்தோறும் மாலை 7 மணி முதல் இரவு 8.30 மணி வரை மாநில அளவில் உள்ள சிறந்த பேச்சாளர்களின் சொற்பொழிவுகள், கருத்தரங்குகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறும். இந்த புத்தகத் திருவிழா அரங்குகளில் உள்ள புத்தகங்கள் சிறுவர் முதல் மூத்த குடிமக்கள் வரையிலும், போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கும் சிறந்த முறையில் பயன்படும் வகையில் அமைக்கப்பட்டு வருகிறது.

புத்தக வாசிப்பில் மாணவர்கள்
புத்தக வாசிப்பில் மாணவர்கள்

இந்த ஆண்டு சர்வதேச சிறுதானிய ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் புத்தகத் திருவிழாவில் சிறுதானியங்களை பிரபலப்படுத்தும் வகையில் சிறுதானிய மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள் விற்பனை அரங்குகளும் இடம் பெற உள்ளது. தருமபுரி மாவட்ட பொதுமக்கள் இந்த புத்தகத் திருவிழாவிற்கு சிறந்த ஒத்துழைப்பை வழங்குமாறு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்" என்றார்.

- பொய்கை.கோ.கிருஷ்ணா

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com