கிருஷ்ணகிரியில் தொழிற்சாலைக்கு இணைப்பு சாலை அமைக்க தடையில்லா சான்று வழங்க 30 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்ட 3 பேரை லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சின்ன எலசகிரி பகுதியைச் சேர்ந்தவர் ரகுமான் கான் (23) இவர், தேன்கனிக்கோட்டை அருகே உள்ள தளி பகுதியில் தொழிற்சாலை நடத்தி வருகிறார்.
இந்த தொழிற்சாலைக்கு செல்ல இணைப்பு சாலை அமைப்பதற்காக தடையில்லா சான்று கேட்டு தளி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் அவர் விண்ணப்பம் செய்துள்ளார்.
சான்று பெற்றுத்தர வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோருக்கு 30 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கொடுக்க வேண்டும் என தளி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பணியாற்றும் அலுவலக உதவியாளர் புட்டண்ணய்யா என்பவர் ரகுமான்கானிடம் கூறியுள்ளார்.
ஆனால் ரகுமான்கான் பணம் கொடுக்க விரும்பவில்லை. இதனால் சான்று வழங்காமல் அலுவலர்கள் கால தாமதம் செய்து வந்துள்ளனர்.
வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு 30 ஆயிரம் லஞ்ச பணத்தை கொடுக்க விரும்பாத ரகுமான்கான் இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார்.
இதனையடுத்து, லஞ்ச ஒழிப்பு போலீசாரின் ஆலோசனைப்படி ரசாயன பொடி தடவப்பட்ட 30 ஆயிரம் ரூபாய் பணத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் ரகுமான் கான் மூலம் வட்டார வளர்ச்சி அலுவலக உதவியாளர் புட்டண்ணய்யாவிடம் கொடுக்க வைத்தனர்.
பணத்தை பெற்ற புட்டண்ணய்யா வட்டார வளர்ச்சி அலுவலர் நாகரத்தினத்திடம் 12 ஆயிரம் ரூபாயும், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் முரளியிடம் 8 ஆயிரம் ரூபாயையும் கொடுத்துவிட்டு மீதமுள்ள 10 ஆயிரம் ரூபாயை அவர், வைத்துக்கொண்டார்.
இந்நிலையில் வட்டார வளர்ச்சி அலுவலக வாயிலில் மறைந்து இருந்த மாவட்ட லஞ்ச ஒழிப்பு துணை கண்காணிப்பாளர் வடிவேல், லஞ்ச ஒழிப்பு காவல் ஆய்வாளர் பிரபு உள்ளிட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் அலுவலகத்திற்குள் அதிரடியாக நுழைந்து லஞ்சம் வாங்கிய 3 பேரையும் கையும்களவுமாக பிடித்து கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- பொய்கை. கோ.கிருஷ்ணா