சிலிண்டர் வெடித்து கோர விபத்து.. உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவிப்பு..!
திருவண்ணாமலையில் வீட்டில் இருந்த சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து விபத்து நேரிட்டதில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே புதுக்காமூர் தெருவில் சந்திரா என்பவர் வீட்டில் திடீரென சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்து காரணமாக, 3 வீடுகள் இடிந்து விழுந்தன. இதனால் அந்த வீடுகளில் இருந்த 7 பேர் கட்டட இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். நீண்ட நேரம் போராடி இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்ட தீயணைப்பு வீரர்கள் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில்,சிகிச்சை பலனின்றி 8 வயது சிறுவன் உள்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலத்த காயமடைந்த 4 பேர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சிலிண்டர் விபத்து குறித்து அரசுக்கு விளக்க கடிதம் அனுப்பியுள்ளதாகவும், உரிய நிவாரண தொகை வழங்க அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.
இதனிடையே, ஆரணி சிலிண்டர் விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார். படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் வழங்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.