தமிழக கவர்னர் மாளிகையில் 84 பேருக்கு கொரோனா தொற்று!
சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் பணிபுரிந்து வரும் 84 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 5,849 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,86,492ஆக அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் மத்திய துணை ராணுவப்படை வீரர்கள் (சி.ஆர்.பி.எப்.) பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்களில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதை அடுத்து, அங்கு பணியில் இருந்த 147 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்தது. பரிசோதனை முடிவில் 84 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள தற்காலிக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.