மரணத்தை மறைக்கும் கொடூர ஆட்சி.. மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் பதிவு
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் மரணத்தை மறைக்கும் கொடூர ஆட்சி என்ற தலைப்பில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் இதுவரை கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,700ஆக இருக்கும் நிலையில், அந்தப் பட்டியலில் 444 பேருடைய மரணங்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன. இதனால், இணை நோய்கள் மற்றும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,144ஆக உயர்ந்துள்ளது.
இதற்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் மரணத்தை மறைக்கும் கொடூர ஆட்சி என்ற தலைப்பில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது, "மரணத்திலும் பொய் கணக்கு எழுதிய கொடூரமான ஆட்சி என்றால் எடப்பாடி பழனிசாமி ஆட்சியாகத்தான் இருக்கும். 3 நாளில் கொரோனா ஒழிந்துடும், 10 நாளில் கொரோனா ஒழிச்சிடுவேன்னு பொய் சவால்களா விடுத்து வந்த எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் கொரோனா தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை 3,144ஆக உயர்ந்துள்ளது.
இதுவரைக்கும் மறைத்து வைத்த மரணங்களை இனியும் மறைக்க முடியாம வெளிய சொல்ல ஆரம்பிச்சிருக்காங்க. இன்னும் எத்தனை மறைத்து மறைக்கப்பட்டதோ? மரணத்தை மறைப்பது எவ்வளவு மோசமான விஷயம்? கொரோனா மரணத்தை மறைத்ததற்காக முதல்வர் பழனிசாமி மன்னிப்பு கேட்க வேண்டும். கொரோனா மரணத்தை போல கொரோனா கால ஊழல்களும் விரைவில் வெளியே வரும்" என கூறியுள்ளார்.