வடிவேலு படப்பாணியில் அரிசிக்கடையில் திருட்டு

வடிவேலு படப்பாணியில் அரிசிக்கடையில் திருட்டு.. போலீஸ் வலைவீச்சு!!

வடிவேலு படப்பாணியில் அரிசிக்கடையில் பணம் திருட்டு.. போலீஸ் வலைவீச்சு!!

வடிவேலு படப்பாணியில் அரிசி வாங்குவது போல், கடை உரிமையாளரின் கவனத்தை திசை திருப்பி ரூ.75 ஆயிரத்தை கொள்ளையர்கள் திருடிச் சென்ற சம்பவம் சென்னையில் அரங்கேறியுள்ளது.
நடிகர் வடிவேலு கருப்பசாமி குத்தகைதாரர் என்ற படத்தில் அரிசி வாங்குவது போல் வந்து, கடைக்காரர் அரிசியை எடுக்கும் போது, எடைக்கற்களை திருடி சென்றுவிடுவார். திரைப்படத்தில் வரும் இந்த கற்பனை காட்சியைப்போன்று, உண்மை சம்பவம் ஒன்று சென்னை தரமணியில் நடந்துள்ளது.
சென்னை தரமணி பகுதியில் அரிசி கடை நடத்தி வரும் சந்திரன் என்பவரின் கடைக்கு, 2 இளைஞர்கள் அரிசி வாங்க சென்றுள்ளனர். அப்போது, பச்சரிசி, பிரியாணி அரிசியை எடுத்து காட்டுங்கள் என்று கேட்டுள்ளனர். ஒவ்வொரு அரிசியாக சந்திரன் எடுத்து காட்ட, இது நல்லா இல்லை, வேறு அரிசி காட்டுங்கள் என்று கூறியுள்ளனர். அரிசி வகைகளை பார்த்துவிட்டு 3 அரிசி மூட்டைகளை எடுத்து வையுங்கள். ஏ.டி.எம்.மில் சென்று பணத்தை கொண்டு வருவதாக கூறிவிட்டு சென்றுவிட்டனர். 
அரிசி மூட்டைகளை எடுத்து வைத்துவிட்டு கடைக்காரர் நீண்ட நேரமாக காத்திருந்தார். அவர்கள் வராத நிலையில், வியாபாரம் செய்த பணத்தை எடுக்க கல்லாப் பெட்டிக்கு சென்றார். அப்போது, கல்லாவில் வைத்திருந்த 75 ஆயிரம் ரூபாய் பணம் மாயமாகியிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
அரிசி வாங்குவது போல் நீண்ட நேரமாக தன்னிடம் பேச்சு கொடுத்த இருவர் பணத்தை எடுத்து சென்றதை அறிந்து, கடைக்காரர் தரமணி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். திரைப்பட பாணியில் கைவரிசை காட்டிய இருவர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். கொரோனா காலத்தில் வியாபாரியின் கவனத்தை திசை திருப்பி கொள்ளையர்கள் நூதன முறையில் திருட்டில் ஈடுபட்டது வியாபாரிகள் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com