காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் அருகே உள்ள புத்தளி கிராமத்தைச் சேர்ந்தவர் ரஞ்சித் குமார் (28). இவர் பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 2020-ம் ஆண்டு ரஞ்சித் குமார் தனது பக்கத்து வீட்டில் வசித்து வரும் 7 வயது சிறுமியிடம் சாக்லேட் வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி நரிமுத்து ஏரிக்கரைக்கு அழைத்துச் சென்று சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.
இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமி தனது பெற்றோரிடம் கூறி உள்ளார். இதையடுத்து சிறுமியின் பெற்றோர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்தநிலையில் வழக்கு செங்கல்பட்டு போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில் ரஞ்சித்குமார் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது உறுதியானதால் அவருக்கு 20-ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், 15,000-ரூபாய் அபராதமும் விதித்து செங்கல்பட்டு போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி தமிழரசி தீர்ப்பளித்தார்.
மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடாக 3-லட்சம் ரூபாயைத் தமிழக அரசு வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.